தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு 0 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் செஷனில் முடிவில் 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடியது. அந்த அணியின் ஜாக் கிராலி அரைசதம் விளாசி இருந்ததால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எட்டும் என்று பார்க்கப்பட்டது.

அந்த நம்பிக்கையுடன் இரண்டாவது செஷனை இங்கிலாந்து அணியின் கிராலி - ஜோ ரூட் கூட்டணி தொடங்கியது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியின் மேஜிக் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் எமனாக வந்தார். அதிரடியாக ஆடிய கிராலி 79 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் போல்டாகி வெளியேறினார். பின்னர் ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் கூட்டணி இணைந்தது.
100வது போட்டியில் களமிறங்கிய பேர்ஸ்டோவ் தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தார். 18 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 175 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் ஜடேஜா வீசிய அடுத்த ஓவரிலேயே நிதானமாக ஆடி கொண்டிருந்த ஜோ ரூட் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கியது. தொடர்ந்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குல்தீப் யாதவ் வீசிய அடுத்த ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி ஒரு ரன் கூட எடுக்காமல் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.
175 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கண் மூடி திறப்பதற்கு 175 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்று நிலை மாறியது. இதன் மூலமாக இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவின் ஸ்பின்னை கைகளில் இருந்து கணிக்க தவறுவதே இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலுக்கு காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.