மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது பின்னடைவை சந்தித்து இருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி ஏற்கனவே இரண்டு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்தியா ஒரு வெற்றி மட்டும் தான் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. இந்த தருணத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதன் பிறகு களமிறங்கி வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து.
இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களுடைய பேஸ் பால் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் சேர்ப்பது போல் விளையாடினர். குறிப்பாக ஜாக் கிராலி 13 பவுண்டரி ,ஒரு சிக்சர் என 113 பந்துகளில் 84 ரன்கள் எடுக்க, பென் டக்கட் 100 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்தனர்.
இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆலிபோப் மற்றும் ஜோரூட் ஆகியோர் தற்போது பேட்டிங் செய்து வருகின்றனர். இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஆன்சூல் ஒரு விக்கெட்டும், சிராஜ் 10 ஓவருக்கு 58 ரன்களுக்கு விட்டுக் கொடுத்து இருக்கின்றார்.
பும்ரா 13 ஓவருக்கு 37 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கின்றார். இருவரும் எந்த ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை. தற்போது இங்கிலாந்து அணி வெறும் 133 ரன்கள் தான் பின்தங்கி இருக்கின்றது. கைவசம் எட்டு விக்கெட் இருப்பதால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட அதிகம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.