ராஜ்கோட் : இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இந்திய மண்ணில் பேஸ் பால் அணுகுமுறையோடு விளையாட வேண்டிய தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் எச்சரித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 399 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் உள்ளது. இந்த தோல்வி இங்கிலாந்து முன்னாள் வீரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் பேஸ் பால் அணுகுமுறைக்கு தகவமைத்து வரும் ஜோ ரூட் அதிரடியாக ரன்கள் சேர்க்கிறேன் என்ற பெயரில் விரைவில் ஆட்டமிழந்து வருகிறார். அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் முன் தீர்மானத்துடன் அஸ்வின் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த 2 போட்டிகளிலுமே ஜோ ரூட் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 11 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை விளாசிய ஜோ ரூட், இவ்வளவு மோசமாக விளையாடுவதற்கு பேஸ் பாலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் பேசுகையில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரே வழியில் மட்டுமே விளையாடுகிறார்கள். முதல் பந்திலேயே 5வது கியரை ரன்களை சேர்க்க முயற்சிக்கிறார்கள். சில வீரர்கள் அப்படி விளையாடுவதால் நான் நிச்சயம் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் அப்படி விளையாடுவது அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால் ஜோ ரூட் அப்படியான ஆட்டத்தை மறக்க வேண்டும். அவர் பழைய பாணியில் விளையாடியே 10 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை விளாசி இருக்கிறார்.
அவர் பேஸ் பால் ஆட்டத்தை விளையாட வேண்டிய தேவையில்லை. இங்கிலாந்து அணியில் இருக்கும் யாராவது ஒருவர், ஜோ ரூட்டிடம் இதனை கூற வேண்டும் என்று நினைக்கிறேன். அவரை அவராகவே இருக்க சொல்ல வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் கிரஹம் கூச்சிற்கு பின் ஜோ ரூட்டால் மிகச்சிறந்த ஸ்பின்னர்களை எதிர்த்து சிறப்பாக விளையாட முடியும். அவர் 2வது இன்னிங்ஸில் விளையாடியதை பார்க்கும் போது, ஜோ ரூட்டை பார்க்க முடியவில்லை. அப்படி விளையாடுவதால் ஜோ ரூட் இந்தியாவில் விக்கெட்டை எளிதாக விட்டுவிடுவார் என்று எச்சரித்துள்ளார்.