லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 371 ரன்கள் என்ற இலக்கை அபாரமாக விளையாடி வெற்றியை பெற்று இருக்கிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டது.
விராட் கோலி,ரோகித் சர்மா போன்ற கேப்டன்கள் இல்லாதது இதற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். லீட்ஸ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தனர். ஒரு கட்டத்தில் 430 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்திய அணி 471 ரன்கள் எல்லாம் அனைத்து விக்கெட்டுகள் இழந்தது.
இது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஆலி போப் சதம் விளாச, ஹாரி புரூக் 99 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 465 ரன்களில் சுருண்டது. இதில் இந்திய வீரர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆறு ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.
இதில் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் அபாரமாக சதம் அடித்தனர். 333 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, 364 ரன்கள் எல்லாம் சுருண்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. கடைசி நாளில் 350 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது கடினமான காரியம் என்பதால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருந்ததாக ரசிகர்கள் நம்பினர். ஆனால் இந்தியா ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டியில் கடைசி ஒரு நாளில் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்த கதையுமே மாற்றியது.
தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி,பென் டக்கட் முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தனர். இதில் ஜாக் கிராலி 65 ரன்களில் ஆட்டம் இழக்க, ஆலி போப் 8 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய பென் டக்கட் 149 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்திலே அதிரடி வீரர் ஹாரி புரூக் அவுட் ஆக, இந்திய அணி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
ஆனால் கேப்டன் ஸ்டோக்ஸ் 51 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணியின் இலக்கு குறைவாக மாறியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் இங்கிலாந்து விக்கெட் எடுக்க முடியவில்லை. இதனால் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆடுகளத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச நான்காவது இன்னிங்ஸ் ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அணியில் 5 சதம் அடிக்கப்பட்டும், தோல்வியை தழுவி இருப்பது இதுவே முதல் முறையாகும்.