பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இங்கிலாந்து அணியின் ஆறு பேட்ஸ்மேன்களை டக் அவுட் ஆக்கியது இந்திய அணியின் பந்துவீச்சு. இதை அடுத்து இங்கிலாந்து அணி மோசமான சாதனை ஒன்றை செய்திருக்கிறது.
ஒரே இன்னிங்ஸில் ஆறு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆன நிலையில், இதுவே இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸில் அதிக டக் அவுட்களைப் பெற்ற போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் 587 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதலில் 407 ரன்கள் எடுத்தபோதும், அந்த அணியின் ஆறு வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

பென் டக்கெட், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ், ஷோயப் பஷீர், ஜோஷ் டங், பிரைடன் கார்ஸ் ஆகிய ஆறு பேரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 5 டக் அவுட்களை மட்டுமே ஒரே இன்னிங்ஸில் சந்தித்து இருந்தது.
இந்திய அணிக்கு எதிராக ஆறு டக் அவுட்களை சந்தித்த இரண்டாவது அணியின் மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஆறு டக் அவுட்களை சந்தித்து இருந்தது. அதற்குப் பிறகு தற்போது இங்கிலாந்து அணி இந்த மோசமான சாதனையை இந்திய அணிக்கு எதிராகச் செய்துள்ளது.
மேலும், உலக அளவில் இதுவரை ஐந்து அணிகள் மட்டுமே ஒரே இன்னிங்ஸில் ஆறு முறை டக் அவுட் சந்தித்த அணியாக இருந்தது. தற்போது ஆறாவது அணியாக இங்கிலாந்து அதில் இணைந்துள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய ஆறு அணிகளும் ஆறு முறை ஒரே இன்னிங்ஸில் டக் அவுட்களை சந்தித்து இருக்கின்றன.
இவ்வாறாக ஆறு டக் அவுட்களை சந்தித்த பிறகு அதிக ரன் குவித்த அணியாக இங்கிலாந்து மட்டுமே உள்ளது. மற்ற ஐந்து அணிகளும் 200 ரன்களைக் கூட தாண்டாத நிலையில் இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.