லீட்ஸ்: இந்திய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக "பேஸ்பால்" என்னும் அதிரடி ஆட்ட முறையைக் கையாண்டு வருகிறது. ஆனால், அது பெரிய அணிகளுக்கு எதிராக வேலை செய்யவில்லை.
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து, இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் ஆட்ட முறை வேலை செய்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற பலமான அணிகளுக்கு எதிராக பேஸ்பால் ஆட்ட முறை இதுவரை வேலை செய்யவில்லை.

மேலும், ஆசிய கண்டத்தில் இங்கிலாந்து அணியால் பேஸ்பால் முறையில் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. இருந்தாலும், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் அந்த முறையில் தான் ஆர்வம் என பிடிவாதமாக இருக்கின்றனர்.
பேஸ்பால் ஆட்ட முறையை விடுத்து தனது பாணியில் டெஸ்ட் போட்டிகளில் ஆடிவரும் ஜோ ரூட் மட்டுமே அந்த அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். இதிலிருந்து பேஸ்பால் முறை சரியாக வேலை செய்யவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனாலும், அவர்களின் பிடிவாதம் இந்த ஆண்டின் இறுதிக்குள் சரியானதா தவறானதா என்ற இறுதி கட்ட முடிவு எடுக்கும் நிலைக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், தற்போது ஜூன் மாதத்தில் இந்திய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து அணி, அடுத்து நவம்பர் இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகப் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி தோல்விகளைச் சந்தித்தால், அத்துடன் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் ஆதிக்கம் இங்கிலாந்து அணியில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
எனவே, இந்திய அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இங்கிலாந்து அணி. அதேபோல, இந்திய அணி இதுவரை இங்கிலாந்தில் கடந்த 18 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வெல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணிக்கு இதுவும் சவாலானதாக இருக்கும். இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே சம நிலையில் தான் இருக்கின்றன. எந்த அணி வெற்றி பெறும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.