லண்டன்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் என்ற இலக்கை கடைசி நாளில் எட்டி இங்கிலாந்து அணி சாதித்து. இதன் மூலம் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை தயாரித்து இந்திய அணியை வீழ்த்தி விடலாம் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் தப்பு கணக்கு போட்டது.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் அதிரடியால் இங்கிலாந்து அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தை மாற்ற இங்கிலாந்து அணி நிர்வாகம் கூறியிருக்கிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரன் குவிப்புக்கு ஆடுகளம் சாதகமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் சோபிக்க பெரிய அளவு தடுமாறினார்கள். இந்த நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வேகப்பந்துவீச்சுக்க சாதகமாகவும் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் வரை ஆடுகளத்தை மாற்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியுள்ளார்.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எந்த மாதிரி ஒரு ஆடுகளம் இருந்ததோ, அதேபோல் ஒரு ஆடுகளும் வேண்டும் என்றும் இங்கிலாந்து அணி நிர்வாகம் கூறி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் கார்ல் மெக்டேர்மோட், இங்கிலாந்து அணி ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆகும் வகையிலும், பந்து பக்கவாட்டில் நகறும் வகையிலும் ஆடுகளத்தை தயாரிக்க கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
நாங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தான் ஆடுகளத்தை தயாரித்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். லார்ட்ஸ் ஆடுகளம் குறித்து கேள்விக்கு பதில் அளித்த இந்திய அணி கேப்டன் கில், லார்ட்ஸ் மைதானத்தில் எந்த மாதிரி ஆடுகளம் தரப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கின்றேன்.
ஆனால் நிச்சயமாக அது ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்காது என்பது மட்டும் நான் நம்புகிறேன் என்று கூறினார். இதே போன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சோபிக்க தவறியதால் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கின்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் திரும்புவார் என தெரிகிறது. இதேபோன்று கஸ் அட்கின்சனும் இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்பு இருக்கின்றது.