மும்பை: டி20 உலககோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை ,இங்கிலாந்து அணி வீழ்த்தும் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப் கணித்துள்ளார். இங்கிலாந்தின் வலுவான பேட்டிங் வரிசை மற்றும் ஓரிரு முக்கிய பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இருந்தாலே , நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தங்களது இடத்தை உறுதி செய்யும் என அவர் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. கடந்த 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்றாவது டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தைச் சந்திக்கும்.

இது குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் லத்தீப், "இங்கிலாந்து அரையிறுதியை வெல்லும். அவர்கள் கடினமான சூழ்நிலைகளிலிருந்து வந்துள்ளனர், இரண்டு அல்லது மூன்று பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். இதுதான் அவர்களுக்குத் தேவை, அவர்களின் நடுவரிசை வலுவாக உள்ளது," என்று திட்டவட்டமாகக் கூறினார்.
"இங்கிலாந்துக்கு இந்த நிலைமைகள் நன்றாகவே தெரியும். ஒரு இங்கிலாந்து வீரர் சிறப்பாகச் செயல்பட்டாலே இந்தியா தோற்க அது போதும்," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அரையிறுதிக்கு இங்கிலாந்தின் பாதை, அவர்களுடைய மன உறுதிக்கு சிறந்த உதாரணம். நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கடினமான சூழ்நிலைகளிலிருந்து மீண்டு வந்து வெற்றிகளைப் பதிவு செய்தனர். சூப்பர் 8 சுற்றிலும் தோல்வியின்றி, நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறினர்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் தொடரில், யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய ஆட்டத்தில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2009ல் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பின்னர் 2012ல் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2022ல் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி இறுதிப் போட்டிக்கு வந்தது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்தத் தோல்விக்குப் பழிதீர்த்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களை எதிர்கொள்ள இங்கிலாந்து தயாராகவே இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சஞ்சு சாம்சனை நோக்கி தொடர்ச்சியான ஷார்ட் பந்துகளை வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் ஆர்ச்சருக்கு எதிராக கடந்த காலங்களில் தடுமாறியுள்ளார். மேலும், பவர் பிளேவில் வில் ஜாக்ஸ் தனது ஆஃப்-ஸ்பின் மூலம் அபிஷேக் சர்மாவுக்கு சவால் விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.