ஐதராபாத் : இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்று சாதனை படைத்துள்ளது.
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தொடர்ந்து 190 ரன்கள் பின் தங்கிய இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸில் 420 ரன்களை குவித்தது.

இதனால் இந்திய அணி வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே 100 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தோல்வியடைந்ததில்லை. இதனால் ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. தொடர்ந்து 4வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் - ஜெய்ஸ்வால் தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் சிறப்பாக தொடங்கிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகியும் வெளியேறினர். தொடர்ந்து ரோகித் சர்மா 39 ரன்களிலும், அக்சர் படேல் 17 ரன்களிலும், கேஎல் ராகுல் 22 ரன்களிலும், ஜடேஜா 2 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த டாம் ஹார்ட்லி, இம்முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் கேஎஸ் பரத் - அஸ்வின் இணை இருவரும் இணைந்து சிறிது நேரம் போராடினர். இவர்கள் 8வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஹார்ட்லி வீசிய பந்தில் பரத் 28 ரன்களில் போல்டாக, அஸ்வின் பவுண்டரி அடிக்க முயன்று 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் ஒரு விக்கெட் மட்டுமே தேவையாக இருந்தது. இதன்பின் பும்ரா - சிராஜ் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு இணைந்தனர்.
கடைசி விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரை வீச ஹார்ட்லி அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்தில் சிராஜ் பவுண்டரி அடிக்க முயன்று கிரீஸில் இருந்து வெளி வர, பந்து கீப்பரின் கைகளில் தஞ்சமடைந்தது. அதனை ஃபோக்ஸ் லாவகமாக ஸ்டம்பிங் செய்ய, இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.