லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. லண்டனில் வெயில் இருப்பதால் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இதுவரை 13 முறை இங்கிலாந்தில் பென் ஸ்டோக்ஸ் முழுநேர கேப்டன் ஆகிய பிறகு 11 முறை முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருந்தார்.

ஆனால் இந்திய அணி, கடந்த டெஸ்ட் போட்டியில் அடித்த அடியில் தற்போது தன்னுடைய திட்டத்தை அவர் மாற்றி இருக்கின்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், அணியில் வீரர்களின் மனநிலை நன்றாக இருக்கின்றது. இந்த தொடரில் இரு அணிகளும் நன்றாக மோதி வருகின்றோம்.
தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நாங்கள் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற முயற்சி செய்வோம். எங்கள் அணி வீரர்களின் உடல் தகுதி நன்றாகத்தான் இருக்கின்றது. லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட எந்த வீரர்களுக்கு தான் ஆர்வம் இருக்காது.
எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் அணிக்குள் வந்திருக்கிறார் என்று ஸ்டோக்ஸ் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் கில் முதலில் தாம் டாஸ் வென்று இருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தான் இருந்தேன். ஏனென்றால் முதல் நாளில் முதல் செஷனில் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும்.
எங்கள் பௌலர்கள் அனைவரும் நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். சென்ற டெஸ்ட் போட்டியில் எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதத்திற்கு நல்ல கூலி கிடைத்திருக்கின்றது. கேப்டன் ஆகவும் பேட்ஸ்மேனாகவும் சிறந்த மனநிலையில் இருக்கின்றேன். எங்கள் அணியில் இன்று பும்ரா பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக விளையாடுகிறார் என்று கில் கூறினார். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சாய் சுதர்சன் அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மாற்றத்தை கில் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.