லீட்ஸ் : இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜெய்ஸ்வால் சதம் அடித்த சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி செய்த ஒரு தவறால் இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி அளிக்கப்பட்டதை பார்த்து நொந்து போனார். என்ன நடந்தது?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் கே.எல். ராகுல் 42 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் அபாரமாக ஆடினர்.

ஜெய்ஸ்வால் பொறுப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் சதம் அடித்து முடித்த இரண்டு ஓவர்களில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஒரு சொதப்பல் நடந்தது. 51வது ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த ஜெய்ஸ்வால் அதைத் தடுத்து ஆடினார். பந்து இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஜோ ரூட் அருகே சென்றது. அவர் பந்தை சரியாகப் பிடிக்காமல் தள்ளிவிட, அது விக்கெட் கீப்பருக்குப் பின்னே நின்றிருந்த ஹெல்மெட்டில் சென்று பட்டது.
கிரிக்கெட் விதிப்படி, பந்து வீசும் அணி மைதானத்தில் வைத்திருக்கும் ஹெல்மெட் போன்ற உபகரணங்கள் மீது பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து பட்டால், அதற்குப் பெனால்டி ரன்களாக 5 ரன்கள் அளிக்கப்படும். அந்த விதிப்படி இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே ஜெய்ஸ்வால் சதம் அடித்து களத்தில் இருந்த நிலையில், சுப்மன் கில்லும் அரை சதம் அடித்திருந்தார். இந்த நிலையில், இங்கிலாந்து அணி எளிதாக ஐந்து ரன்களை இந்திய அணிக்கு வாரி வழங்கியது. இந்த நிகழ்வைப் பார்த்த பென் ஸ்டோக்ஸ் அதிருப்தியில் இருந்தார்.
இது விக்கெட் கீப்பர் செய்த தவறுதான். பொதுவாக, ஹெல்மெட்டை அவிழ்க்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அதை ஆடுகளத்துக்கு வெளியே வைப்பதுதான் சரியான முறையாக இருக்கும். அந்த ஒரு தவறால் இந்த பெனால்டி ரன்கள் இந்தியாவுக்குக் கிடைத்தன.
அதன் பின்னர் ஜெய்ஸ்வால் 101 ரன்கள் எடுத்த நிலையில் பந்துவீச்சிலேயே ஆட்டம் இழந்தார். மறுபுறம் சுப்மன் கில் அபாரமாக ஆடினார். ரிஷப் பன்ட்டும் ரன் சேர்த்தார். 69 ஓவர்கள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் சேர்த்து இருந்தது.