சென்னை : திலக் வர்மாவை பார்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 166 ரன்கள் என்ற இலக்கை எட்ட கடுமையாக தடுமாறியது.
முன்னணி வீரர்கள் பலரும் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் விக்கெட் இழக்க திலக் வர்மா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், "இப்போதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. நாங்கள் முதலில் பந்து வீசியபோது 160 ரன்கள் என்பது நல்ல இலக்காக தான் எங்களுக்கு தெரிந்தது. ஆனால் இங்கிலாந்து அணியும் அபாரமாக பந்து வீசி ஆட்டத்திற்கு திரும்ப வந்தார்கள்".
"இந்த போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக இருந்தது. நாங்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன்களை வைத்து கடந்த சில தொடர்களில் விளையாடி வருகிறோம். அந்த கூடுதல் பேட்ஸ்மேனால், எங்களுக்கு ஒரு இரண்டு அல்லது மூன்று ஓவர்களை பந்து வீச்சிலும் வழங்கும் வகையில் பார்த்துக் கொள்கிறோம். இந்த போட்டிக்கு தயாராகும் முன் கொல்கத்தாவில் விளையாடுவது போல் அதிரடி காட்ட வேண்டும் என நினைத்தோம்".
"வீரர்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவது பார்க்கும் போது நன்றாக தான் இருக்கிறது. ஆனால் அதே சமயம் அனைத்து பேட்ஸ்மேன்களும் அணிக்காக பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன சின்ன பாட்னர்ஷிப்களை அமைத்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும்".
"திலக் வர்மா விளையாடும் விதத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்த்து மற்ற பேட்ஸ்மேன்களும் கற்றுக் கொள்ள வேண்டும். திலக் வர்மா பொறுப்பை எடுத்துக்கொண்டு அபாரமாக விளையாடினார்.இதேபோன்று ரவி பிஷ்னாயும் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங் செய்தும் வருகிறார்.
இதன் மூலம் பலருக்கும் நெருக்கடி குறைகிறது. சில சமயம் பேட்டிங்கில் நாம் ஏமாற்றம் தரலாம். ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும்" என்று சூரிய குமாரியாதவ் கூறியுள்ளார்.