விசாகப்பட்டினம் : இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் 336 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் கூடுதலாக 60 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டாகியது. ஜெய்ஸ்வாலின் அபார இரட்டை சதம் காரணமாக இந்திய அனி 396 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் பென் டக்கெட் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கிராலி அதிரடியாக விளையாட, அவருக்கு போப் சிறப்பாக கம்பெனி கொடுத்தார். பவுண்டரியாக விளாசிய கிராலி அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.
இந்த நிலையில் அக்சர் படேல் பவுலிங்கில் கிராலி 76 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து பும்ரா பந்தில் ரூட் மற்றும் போப் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 136 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விசாகப்பட்டினம் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் அணி தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற போதும், இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் வகையில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் கவனமாக விளையாடி வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.