ராஜ்கோட் : கிரிக்கெட்டை விடவும் குடும்பத்தினருடன் முக்கியமான நேரத்தில் உடனிருப்பதே சரி என்று விராட் கோலி எடுத்த முடிவிற்கு இங்கிலாந்து ஜாம்பவான் நாசர் ஹுசைன் ஆதரவளித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ள நிலையில், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. முதல் 2 போட்டிகளில் இருந்து விராட் கோலி சொந்த காரணங்களால் விலகிய நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம் என்றே தகவல் வெளி வந்துள்ளது.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2வது குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் கூறியிருந்தார். ஏற்கனவே முதல் குழந்தையான வாமிகா பிறந்த போதும் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுடன் இருந்தார். இதனால் அதையே 2வது குழந்தைக்கும் விராட் கோலி பின்பற்றுகிறார் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விராட் கோலி குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பேசுகையில், சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பத்தினருக்கு தான் விராட் கோலி எப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும். விராட் கோலி இந்திய அணியில் விளையாடாதது பின்னடைவு தான்.
ஆனால் அவரது இடத்தில் விளையாட ஏராளமான இளம் வீரர்கள் திறமையுடன் இருக்கிறார்கள். கேஎல் ராகுல் காயமடைந்து 2வது டெஸ்டில் விளையாடவில்லை என்றாலும், 3வது டெஸ்டில் களமிறங்குவார். கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் மிகச்சிறந்த வீரராக உருவாகியுள்ளார். அவர் மீண்டும் வந்தால், இந்திய பேட்டிங் கூடுதல் வலிமை பெறும். ஆனாலும் டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகுவது உலக கிரிக்கெட்டுக்கே ஏமாற்றம் தான்.
நிச்சயம் இந்த டெஸ்ட் தொடர் கூடுதல் ஸ்பெஷலாக அமையவுள்ளது. முதல் 2 போட்டியுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது. ஆனால் விராட் கோலி கிரிக்கெட் வாழ்க்கையை நாம் திரும்பி பார்க்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விராட் கோலி தீவிர கிரிக்கெட்டை இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு ஒரு சிறிய ஓய்வு தேவைப்படும் போது, அவருக்கு வாழ்த்து கூறி அனுமதிக்க வேண்டும். கிரிக்கெட்டை விடவும் சொந்த வாழ்க்கையும், குடும்பமும் முக்கியம் என்று கூறியுள்ளார்.