பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் மற்றும் ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடைய சாய் சுதர்சன் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடினார். இதனால் சாய் சுதர்சனுக்கு பெரிய அளவு இந்த தொடரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த சூழலில் சாய் சுதர்சன் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் கருண் நாயர் ஆறாவது வீரராக களம் இறங்கி பேட்டிங்கில் ரன் எடுக்கவில்லை. இதனால் அவரை மூன்றாவது இடத்திற்கு கொண்டுவர தான் சாய் சுதர்சனை கம்பீர் நீக்கி இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருண் நாயருக்கு இடம் வழங்க வேண்டும் என்பதற்காக சாய் சுதர்சனை நீக்கி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் முதல் டெஸ்டில் விளையாடிய வீரரை இப்படி அதிரடியாக நீக்கினால் அது அவருடைய உத்வேகத்தை பாதிக்காதா என்றும் பலரும் கேள்விகள் எழுப்பி இருக்கின்றனர். குல்தீப் யாதவை சேர்க்காமல் விட்டதற்கும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக தான் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதாக கில் தெரிவித்திருந்தார்.இதற்கு பதில் அளித்த ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் 20 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தவிர பேட்டிங்கை வலுப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்தியா பயந்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.