புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் சஞ்சு சாம்சன் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் நல்ல பார்மில் இருந்த சஞ்சு சாம்சன் தற்போது தடுமாறி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் முதல் டி20 போட்டியில் மட்டும்தான் 26 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு 5,3 ரன்கள் மட்டுமே சேர்த்த சாம்சன் தற்போது நான்காவது டி20 போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

சஞ்சு சாம்சனுக்கு ஷார்ட் பால் எதிர்கொள்ள மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. இதனால் சஞ்சு சாம்சன் வந்தாலே ஷார்ட் பாலை ஆயுதமாக வைத்து அவருடைய விக்கெட்டை எடுத்து விடுகின்றனர். இது இந்தியாவுக்கு மோசமான தொடக்கமாக அமைகிறது. இதனால் இந்த குறையை சஞ்சு சாம்சன் சரி செய்யவில்லை என்றால் இந்திய அணியில் மீண்டும் அவருடைய இடத்தை அவர் இழக்கக்கூடும்.
நல்ல பார்மில் இருக்கும் போது சிறந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரன்களை சேர்ப்பார்கள். ஆனால் சஞ்சு சாம்சன் இதுபோல் செயல்பட்டு மீண்டும் அணியில் இடத்தை இலக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதே போன்று சூரிய குமார் யாதவ் கடந்த சில காலமாகவே தடுமாறி வருகிறார். தற்போது கடைசியாக விளையாடிய 16 இன்னிங்ஸ்களில் அவர் இரண்டு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார்.
மேலும் கடைசியாக விளையாடிய 6 இன்னிங்ஸில் அவர் ஒரு முறை கூட 15 ரன்கள் தொட்டது கிடையாது. தற்போது அவர் டக் அவுட் ஆகி இருப்பதும் ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது. சூரியகுமாரி யாதவ் கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக தான் நன்றாக விளையாடியதாகவும் வெறும் கேப்டன் என்ற பெயரில் அணியில் நீண்ட நாள் நீடிக்க முடியாது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஒரு நாள் அணியில் தனது இடத்தை இழந்த சூரிய குமார் யாதவ்,இதே போல் செயல்பட்டால் டி20 அணியும் இடத்தை இழந்து விடுவார் என்று ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.