லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் வர்ணனையின்போது, முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தேவையே இல்லாமல் விராட் கோலியைச் சீண்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
நேரலை வர்ணனையின்போது, கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் பேட்டிங்கை பாராட்டிப் பேசிக்கொண்டிருந்த மஞ்ச்ரேக்கர், திடீரென, "இதற்கு முன் இருந்த பேட்ஸ்மேன் ஒருவராக இருந்தால், இந்த பந்தை தேவையில்லாமல் அடித்து அவுட் ஆகியிருப்பார்," என்று குறிப்பிட்டார். அவர் விராட் கோலியைத்தான் மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது, கே.எல். ராகுலும் ஜெய்ஸ்வாலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆஃப்-சைடில் வீசிய பந்துகளை அடிக்காமல் நிதானமாக விட்டனர். தேவையில்லாத ஷாட்களை அடிக்கும் பதற்றமின்றி இருவரும் நிதானமாக விளையாடியதை பாராட்டும் விதமாகப் பேசினார் மஞ்ச்ரேக்கர் -
"கே.எல். ராகுலும் ஜெய்ஸ்வாலும் ஆஃப்-சைடில் வரும் பந்துகளை சரியாகக் கணித்து விடுகிறார்கள். இதற்கு முன்பு இருந்த பேட்ஸ்மேனாக இருந்தால், இந்த பந்தை அவசரப்பட்டு ஆடி ஆட்டமிழந்திருப்பார். ஆனால் இவர்கள் அப்படி இல்லை, மிகச் சிறப்பாக விளையாடுகிறார்கள்," என்றார்.
விராட் கோலியை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சீண்டியதாகக் கருதிய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவருக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது பேட்டிங் காலத்தில் மிக மோசமாக விளையாடியதைச் சுட்டிக்காட்டிய ரசிகர்கள், "விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். அவரது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் சில பலவீனங்கள் ஏற்பட்டன, அதற்காக அவர் தற்போது ஓய்வையும் அறிவித்துவிட்டார். அப்படியிருந்தும் விராட் கோலியை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வேண்டுமென்றே ஏன் சீண்ட வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், விராட் கோலி மீது இருக்கும் பொறாமையால்தான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்றோர் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போட்டியில் ராகுல் 42 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் குவித்தனர். இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தனர்.