மும்பை: டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் அபிஷேக் சர்மாவின் மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள அபிஷேக் சர்மா, 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும் மோசமாக விளையாடினார்.
நேற்று நடந்த இப்போட்டியில் இங்கிலாந்தின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் வில் ஜாக்ஸின் ஆஃப்-ஸ்பின் வலையில் சிக்கி, இடது கை ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.இங்கிலாந்து டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. வான்கடே ஸ்டேடியத்தில் போட்டியின் இரண்டாவது ஓவரில் இச்சம்பவம் நடந்தது.

ஐந்தாவது பந்துக்கு முன், ஜாக்ஸ் கள வியூகத்தை மாற்றினார். மிட்-ஆஃப் வீரரை அருகில் வரவழைத்து, லாங்-ஆன் மற்றும் டீப் மிட்-விக்கெட் வீரர்களைத் தூரமாக்கினார். ஐந்தாவது பந்தில், அபிஷேக் பிட்ச்-ஐ விட்டு இறங்கி வந்து மிட்-ஆஃப் கடந்து பவுண்டரி அடித்தார். ஆறாவது பந்தில், ஜாக்ஸ் பந்தை மெதுவாக வீசினார். அதனை அபிஷேக் லெக்-சைடில் ஃபிளிக் செய்ய முயன்றார். ஆனால் போதிய பவர் இல்லாததால், பந்து டீப் மிட்-விக்கெட் பகுதிக்கு எளிதான கேட்ச்சாக மாறியது.

இந்த டி20 உலகக் கோப்பையில் இது அவரது ஆறாவது 20 ரன்களுக்கு கீழே எடுத்த ஸ்கோராகும். ஏழு போட்டிகளில் அவர் மொத்தமாக 89 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஜிம்பாப்வேக்கு எதிராக சூப்பர் 8 போட்டியில் அடித்த 55 ரன்கள் பெரும்பங்கு வகித்தது. இதனால் எக்ஸில் ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.
அபிஷேக் மனரீதியாக தயாராக இல்லை. இந்த உலகக் கோப்பையில் அவர் அதிர்ச்சியூட்டும் ஷாட்களை விளையாடியுள்ளார் என்று ரசிகர்கள் சாடியுள்ளனர். இந்த உலகக் கோப்பையில் ஆஃப்-ஸ்பின்னர்களால் அபிஷேக் இவ்வளவு மோசமாகப் பாதிக்கப்படுவார் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர்.
20 உலகக் கோப்பையின் மிகப்பெரிய ஏமாற்றம் அபிஷேக் சர்மாதான். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்தவர், அதிக ரன்கள் குவிப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவருக்கு எதுவும் பலிக்கவில்லை. அவர் ஒரு Fraud என்றும், முக்கியத்துவம் இல்லாத இருத்தரப்பு தொடரிலும் மட்டுமே விளையாடுகிறார் என்று ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.
பல கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் அபிஷேக் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிப்பார் என்று கணித்திருந்தனர். 2025ல் அவர் 21 போட்டிகளில் 859 ரன்கள் எடுத்து, 193.47 ஸ்ட்ரைக் ரேட்டுடன் சிறப்பாகச் செயல்பட்டதே இதற்குக் காரணம். ஐசிசி ஆடவர் டி20ஐ பேட்ஸ்மேன் தரவரிசையில் சிறந்த வீரராக விளங்கினார்.

இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் சற்று பதட்டமாகவும், சில சமயங்களில் குழப்பமாகவும் காணப்படுகிறார். அழுத்தம் காரணம் எனப் பேசப்பட்டாலும், தொடர் நடுவில் உடல்நலக்குறைவால் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்ததே, உடல்ரீதியாக அவர் சிறந்த நிலையில் இல்லாததற்குக் காரணம் எனத் தெரிகிறது.