அகமதாபாத் : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் தூண் போல் நின்று அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2வது போட்டியில் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி படிக்கலின் அபார அரைசதம் காரணமாக 192 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய பவுலர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியாக இங்கிலாந்து லயன்ஸ் அணி 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கிய நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் கடைசி வரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் 141 பந்துகளை எதிர்கொண்டு 54 ரன்களை சேர்த்துள்ளார்.
இந்த போட்டி மட்டுமல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் இந்திய அணி டிரா செய்ய முக்கிய காரணமாக அமைந்தார். 208 பந்துகளுக்கு 97 ரன்கள் எடுத்து அசத்தினார். தற்போது இன்னொரு அரைசதம் விளாசியுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இந்திய அணியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை நீக்கிவிட்டு இளம் வீரரான சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்களிடையே கருத்துகள் எழுந்துள்ளன. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாய் சுதர்சன் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவரின் ஆட்ட முறைக்கு இந்திய அணியின் நம்பர் 3 வரிசை சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.