லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 134 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்க முடியும் என்றும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓய்வறையில் இருந்து அனுப்பிய ஒரு செய்தியால் தான் ரிஷப் பண்ட் குழப்பமடைந்து ஆட்டமிழந்தார் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அபாரமாக ரன் குவித்தது. ஜெயஸ்வால் 101 ரன்களும், சுப்மன் கில் 147 ரன்களும் எடுத்திருந்தனர். இவர்கள் இருவரும் சதம் அடித்த நிலையில், மூன்றாவதாக ரிஷப் பண்ட்டும் சதம் அடித்தார்.

அவர் 100 ரன்கள் எடுத்து ஆடி வந்தபோது, சுப்மன் கில் மற்றும் கருண் நாயர் அடுத்தடுத்து ஆட்டமிழந்திருந்தனர். அதனால் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போதும் ரிஷப் பண்ட் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடி வந்தார். அப்போது அவர் அடித்த ஷாட்கள் பயமுறுத்துவதாக இருந்தன.
'இவர் விக்கெட்டை இழந்துவிடுவாரோ?' என்றுதான் அனைவரும் பார்க்க வேண்டி வந்தது. ஆனால் இதுதான் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் ஸ்டைல். அவர் இத்தனை காலமாக இப்படித்தான் ஆடி வந்திருக்கிறார்; இப்படி அடித்தான் இந்த சதத்தையும் அவர் அடித்து இருக்கிறார்.
ஆனால், அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தவுடன், அவரது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளுமாறு, அதாவது தடுப்பாட்டத்தை ஆடுமாறு கௌதம் கம்பீர் ஓய்வறையிலிருந்து செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. அதன் பிறகு ரிஷப் பண்ட்டின் ரன் குவிக்கும் வேகம் சரிந்தது.
மேலும், நிறைய பந்துகளைத் தடுத்து ஆட முயன்றார். ஆனால் அது அவருக்கு இயல்பாக வராத ஒரு விஷயம். இருப்பினும், அதற்கான முயற்சியில் இருந்தபோது, ஜோஷ் டங் வீசிய ஒரு பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் இதைச் சுட்டிக்காட்டி, "சில வீரர்களுக்குத் தவறான செய்தியை அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்" என சுட்டிக்காட்டினார். அதாவது, ரிஷப் பண்ட் அதிக ஷாட்களை அடிக்கக் கூடியவர். அவரை தடுத்து ஆடுமாறு சொன்னால் இப்படித்தான் நடக்கும் என தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டி இருக்கிறார்.