மான்செஸ்டர்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக இருந்த ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றனர். இதனை அடுத்து புதிய டெஸ்ட் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டார். பெரிய அளவு கேப்டன் அனுபவம் கில்லுக்கு இல்லாத நிலையில் அவருடைய செயல்பாடுகள் தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டனாக யுக்திகள் வகுப்பதில் பல தவறுகளை அவர் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக நான்காவது டெஸ்டில் வாஷிங்டன் சுந்தரை 69 ஓவருக்கு பிறகு தான் கில் பயன்படுத்தினார்.

இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கில் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கில் மீது ஊடகங்களில் பல குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
நான் மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன். இங்கிலாந்து போன்ற மண்ணில் இந்திய அணியை வழிநடத்துவது என்பது மிகப் பெரிய கடினமான பணியாகும். அதுவும் கில்லுக்கு இது முதல் பணியாக மாறிவிட்டது. கில் ஒரு இளம் கேப்டன்,அணியில் அனுபவம் இல்லாத வீரர்களும் இருக்கின்றார்கள். இதனால் கண்டிப்பாக தன்னுடைய பதவி குறித்து அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்வார். இதற்காக அவர் செய்த விஷயங்களுக்கெல்லாம் நான் ஆதரவு தெரிவிக்கின்றேன் என்று அர்த்தம் கிடையாது.
அவர் இளம் வீரர் என்பதால் கொஞ்சம் பொறுமை காத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறி வருகின்றேன் என தீப் திஸ்குப்தா கூறியுள்ளார். இதேபோன்று இங்கிலாந்து அணியில் முன்னாள் வீரர் ஜனார்த்தன் டிராட், கில் மனவலிமையை பாராட்டி இருக்கின்றார்.
உடல் தகுதி என்பது இந்த மாதிரி விஷயத்தில் தான் முக்கியமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அணியை வழிநடத்தி விட்டு மீண்டும் பேட்டிங்கில் ரன் குவிப்பது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு மனவலிமையும் தேவை. கில்லிடம் அது நிறையவே இருக்கின்றது என்று பாராட்டியுள்ளார்.