பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் எடுத்த பெரிய ரிஸ்க் தான் தற்போது வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்திருக்கின்றது.பிர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது.
அப்போது இங்கிலாந்துக்கு எந்த இலக்கை வெற்றிக்காக நிர்ணயிக்கலாம் என்பதில் கம்பீர் மற்றும் கில் எடுத்த முடிவுதான் தற்போது வெற்றிக்கு காரணமாக அமைந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.இந்திய அணி 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தபோது பலரும் இதை தவறான முடிவு என்று விமர்சித்து இருந்தார்கள்.

காரணம் ஐந்தாவது நாள் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது மற்றும் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணிக்கு அதிக ஓவர்கள் தேவைப்படும் என்றெல்லாம் பலரும் கணக்கு போட்டார்கள்.ஆனால் இதையெல்லாம் காதில் கேட்டுக் கொள்ளாத சுப்மன் கில்லும் கம்பீரும் 68 ரன்கள் வரை இலக்காக நிர்ணயித்து இருந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 68 ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்டு 271 ரன்கள் அடித்திருந்தது. இதற்குக் காரணம் இலக்கு தொடவே முடியாது என்ற ஒரு நிலைக்கு இருந்ததால், அது மனதளவில் இங்கிலாந்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் அடித்து ஆடுவதா இல்லை மெதுவாக ஆடுவதா என்ற குழப்பத்திற்கு வருவார்கள்.
இங்கிலாந்து அணிக்கு மெதுவாக விளையாடி டிரா செய்ய வராது என்பதை புரிந்து கொண்ட கம்பீரும், சுப்மன் கில்லும் தொடவே முடியாத என்ற ஒரு இலக்கை கொடுத்தால் அவர்கள் புலம்பி போய் ஆட்டத்தை இழந்து விடுவார்கள் என்பதில் தெளிவாக இருந்திருக்கின்றார்கள்.ஒருவேளை இந்திய அணி 400 அல்லது 450 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தால் இந்த இலக்கை எட்டி விட முடியும் என்ற நம்பிக்கை இங்கிலாந்துக்கு ஏற்பட்டிருக்கும். இதனால் அவர்கள் அதிரடியாக ஆடி ஒரு வேளை இலக்கை எட்ட கூட வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இலக்கை வெற்றிகரமாக எட்டி விடுவோம் என்று இங்கிலாந்துக்கு தோன்றவே கூடாது என்பதற்காக தான் இந்திய வீரர்கள் 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தார்கள்.இதன் பின்னால் மிகப் பெரிய ரிஸ்க் இருந்திருக்கின்றது. ஒருவேளை மழை பாதிக்கப்பட்டு 10 விக்கெட்டும் எடுக்க முடியாமல் போனால் பலரும் கம்பீர் மற்றும் கில், தாமதமாக டிக்ளேர் செய்ததுதான் போட்டி டிராவானதற்கு காரணம் என்று கூறி இருப்பார்கள்.
ஆனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆடிய விதத்தையும் இந்திய வீரர்கள் பந்து வீசிய விதத்தையும் நம்பி தமக்கு 90 ஓவர்களே இங்கிலாந்தின் விக்கெட்டை எடுக்க போதும் என்ற நம்பிக்கையை வைத்து கம்பீரும், கில்லும் பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கின்றன. அந்த ரிஸ்க் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடி தந்திருக்கின்றது.