ராஜ்கோட்: இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் இளம் வீரர் துருவ் ஜுரலுக்கு இரண்டு மோசமான விஷயங்கள் ஒரே போட்டியில் நடைபெற்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.
ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகிய நிலையில் துருவ் ஜுரல் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் பேட்ஸ்மேனாக வாய்ப்பு பெற்றார். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக் கொண்டு இருந்தது.

அப்போது நான்கு விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தார். அப்போது ஆறாம் வரிசையில் துருவ் ஜுரல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் ஆல் ரவுண்டர்கள் என்பதால் அவர்கள் அதன் பின்னர் பேட்டிங் இறங்குவார்கள் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால், துருவ் ஜுரலுக்கு முன்னதாகவே வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டி போல நிதானமாக ஆடி பந்துகளை வீணடித்தனர். அப்போது துருவ் ஜுரல் தனது வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருந்தார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். அக்சர் பட்டேல் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னரே துருவ் ஜுரல் களத்துக்கு வந்தார். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்த முடிவை எடுத்ததற்கு காரணமாக வலது கை - இடது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் ஆட வேண்டும் என்ற வியூகம் முன் வைக்கப்படுகிறது. பொதுவாக முதல் மூன்று விக்கெட்கள் வரை இது போன்ற வியூகம் ஒரு அணிக்கு சாதகமானதாக இருக்கும்.
ஆனால், நான்கு விக்கெட்களை இழந்த பிறகு வலது கை - இடது கை ஆட்டக்காரர்களை ஆட வைக்க வேண்டும் என்பதை விட அந்த நேரத்தில் ரன் குவிக்கும் பேட்ஸ்மேன் யார்? என்பதைத் தான் பார்க்க வேண்டும். டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்களாக அதிக அனுபவம் இல்லாத வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேலை, துருவ் ஜுரலுக்கு முன்னதாக அனுப்பியது தவறான முடிவாக அமைந்தது.
அடுத்து துருவ் ஜுரல் களத்தில் இருந்தபோது ஒரு கட்டத்தில் இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது மற்றொரு புறம் ஆமை வேகத்தில் ஆடிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா, அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்க மறுத்தார். 18 வது ஓவரின் கடைசி பந்தில் துருவ் ஜுரல் ஒரு ரன் ஓட முயன்றார்.
அப்படி செய்தால் அடுத்த ஓவரின் முதல் பந்தை ஜுரல் சந்திப்பார். ஆனால், தான் மட்டுமே அதிரடியாக ஆடி போட்டியை முடித்து விடலாம் என்ற எல்லையற்ற தன்னம்பிக்கையுடன் ஹர்திக் பாண்டியா ஸ்ட்ரைக்கை கொடுக்க மறுத்தார். ஆனால், 19 வது ஓவரின் முதல் பந்தில் பாண்டியா கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கவுதம் கம்பீர் மற்றும் ஹர்திக் பாண்டியா எடுத்த தவறான முடிவுகளால் துருவ் ஜுரல் பாதிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் அவர் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது துருவ் ஜுரல் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற பிம்பம் எழுந்து இருக்கிறது. இதை சுட்டிக் காட்டி அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம்.