லண்டன்: லண்டன் ஓவல் மைதான ஊழியர்களுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி வீரர்களின் பயிற்சிக்கான ஏற்பாடுகள் கம்பீருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் டென்ஷனான கம்பீர், மைதான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இந்திய அணியின் அபார ஆட்டத்தால் டிராவில் முடிவடைந்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதனால் தொடரை சமன் செய்ய இந்திய அணி கடைசி போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் நேற்று ஓய்வெடுத்துவிட்டு, இன்று பயிற்சிக்கு திரும்பி இருக்கின்றனர். ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகி இருக்கும் நிலையில், துருவ் ஜுரெல் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் களமிறங்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால் கடந்த போட்டியில் பும்ரா சோர்வடைந்து வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியின் போது, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் லண்டன் ஓவல் மைதானத்தில் பிட்ச் தயாரிப்பாளருடன் மோதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்திய அணி வீரர்களின் பயிற்சிக்கு ஓவல் மைதான ஊழியர்கள் செய்து கொடுத்துள்ள ஏற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்திய வீரர்களும், கவுதம் கம்பீரும் ஊழியர்களிடம் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கவுதம் கம்பீரிடம் வந்து ஓவர் மைதான ஊழியர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். அப்போது கம்பீர், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லத் தேவையில்லை. நீங்கள் சென்று யாருடன் வேண்டுமானாலும் புகார் அளித்து கொள்ளுங்கள்.
அதனைப் பற்றி கவலையில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இரு தரப்பிலும் டென்ஷன் அதிகரிக்க, பேட்டிங் பயிற்சியாளர் சுதான்ஷு கோடக் வந்து சூழலை கவனமாக கையாண்டுள்ளார். வழக்கமாக இங்கிலாந்து அணி மோசமாக ஆடினால், அந்த நாடுகளின் கிரிக்கெட் ஊழியர்கள் எதிரணியை மோசமாக நடத்துவது பல காலங்களாக நடந்து வருகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நடந்த டார்ச்சர்களை அஸ்வின் பல்வேறு தருணங்களிலும் தனது யூட்யூப் சேனலில் பகிர்ந்துள்ளார். இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின அபார செயல்பாடுகள் ஓவர் மைதான ஊழியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் இப்படியான செயலில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.