மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கம்பீர் வழிகாட்டுதலில் இந்திய அணி தோல்வியை தழுவி வருகிறது.
கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. 7 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் சமனையும் இந்தியா அடைந்திருக்கிறது.

இந்த நிலையில் பயிற்சியாளராக வருவதற்கு முன் கம்பீர் தமது பயிற்சியாளர் குழுவில் யாரெல்லாம் வேண்டும் என கேட்டு வாங்கினார். உதாரணத்திற்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியர் ஒருவரையே சேர்த்துக் கொள்ள பிசிசிஐ அறிவுறுத்தியது. ஆனால் தமக்கு தென்னாபிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்க்கல் தான் வேண்டும் என கம்பீர் கேட்டு வாங்கினார்.
இதேபோன்று அபிஷேக் நாயர் மற்றும் நெதர்லாந்து வீரர் டென் தோசேட் போன்றவர்களை கம்பீர் கேட்டு வாங்கினார். ஆனால் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. இதனால் கம்பீர் மீது கடும் அதிருப்தி பிசிசிஐ மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய கிரிக்கெட்டில் ஒரு எழுதப்படாத விதி இருக்கின்றது.
இந்திய அணி நன்றாக செயல்பட்டால், அதை சார்ந்திருப்பவர்கள் அனைவரும் பெருமையாக இருப்பார்கள். அதேவேளை இந்திய அணி தோல்வியை தழுவினால் அதில் சார்ந்து இருப்பவர்கள் கடும் விமர்சனத்தை சந்திப்பார்கள். நான் கேப்டன் கில் மீது இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்று சொல்வேன்.
ஏனென்றால் தற்போது தான் அவர் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இன்னும் அனைத்தையும் புரிந்து கொள்ள அவருக்கு இன்னும் நேரம் ஆகும். தற்போது கம்பீர் மீதுதான் கடும் நெருக்கடி இருக்கின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய செயல்பாடை பார்த்தீர்கள் என்றாலே அது உங்களுக்கு புரியும். பயிற்சியாளராக அவர் வெறும் மூன்று போட்டிகள் மட்டும் தான் வெற்றியை பெற்று தந்திருக்கிறார்.
அதில் இரண்டு போட்டி வங்கதேசத்துக்கு எதிரானது. நாம் மூன்று போட்டிகள் நியூசிலாந்துக்கு எதிராகவும், 3 போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தற்போது இங்கிலாந்துக்கு எதிராகவும் தோற்று இருக்கிறோம். அவர் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறார்.
கம்பீர் கேட்டதெல்லாம் பிசிசிஐ செய்து தந்தது. ஆனால் எதிர்பார்த்த முடிவுகள் தான் கிடைக்கவில்லை.எனவே எந்த ஒரு காரணத்தையும் பிசிசிஐ எதிர்பார்க்காது. இங்கிலாந்து தொடர் எதிர்பார்த்த அளவு நமக்கு அமையவில்லை என்றால் பல கேள்விக்குறிகள் எழும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.