மும்பை: இனி இந்திய டி20 அணி ஒவ்வொரு போட்டியிலும் 250 ரன்கள் குவிக்க முயற்சி செய்யும் என அதிரடியாக அறிவித்து இருக்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 247 ரன்கள் குவித்ததை அடுத்து அவர் இவ்வாறு பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4 - 1 என வென்று இருக்கிறது. ஐந்தாவது போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்து இருந்தது. 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று இருந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கில் ஒரு வித்தியாசத்தை பார்க்க முடிந்தது.

இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட் வீழ்ச்சியை பற்றி யோசிக்காமல் இடைவிடாமல் அதிரடி ஆட்டத்தை ஆடினர். நான்காவது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்த போதும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்து ஐந்தாவது போட்டியில் அபிஷேக் சர்மா மட்டுமே ஒருபுறம் நிலையாக நின்று அதிரடியாக ரன் குவித்து வந்தார். மறுபுறம் விக்கெட்கள் வீழ்ந்து கொண்டே இருந்தன. ஆனாலும், ஒவ்வொரு பேட்ஸ்மேனும் விரைவாக ரன் குவிப்பதில் தான் கவனம் செலுத்தினர். 18 வது ஓவரில் அபிஷேக் சர்மா ஆட்டம் இழந்த பின்னர் இந்திய அணியால் கடைசி இரண்டு ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆனாலும் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 247 ரன்களை அடித்து இருந்தது. இங்கிலாந்து அணியின் "பேஸ்பால்" (Bazball) போன்ற இந்த வித்தியாசமான அணுகுமுறை குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுகையில் இனி ஒவ்வொரு போட்டியிலும் 250 ரன்கள் குவிக்க முயற்சி செய்வோம், அப்போது 120 ரன்களில் ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை என்கிற ரீதியில் பேசி இருந்தார்.
இது சாத்தியமா? இது நீண்ட கால அடிப்படையில் சரியான திட்டமாக இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்து அணி இப்படி தான் ஆடி வருகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரென்டன் மெக்குல்லம் சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் 40 ஓவர்களில் 500 ரன்கள் குவித்து விட்டு ஆல் அவுட் ஆனாலும் பரவாயில்லை என ஒரு யோசனையை முன்வைத்து இருந்தார்.
இது போன்ற திட்டங்கள் தான் இனி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை வழிநடத்தப் போவது தெரிகிறது. ஆனால், இது கிரிக்கெட்டின் வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.