கொல்கத்தா: இந்திய அணியின் பயிற்சியாளரை ஐபிஎல் தொடரின் முடிவை வைத்து தேர்வு செய்தது மிகவும் தவறு எனவும், கவுதம் கம்பீர் மிகவும் ஆக்ரோஷமானவர் என்ற வகையில் அவர் பயிற்சியாளராக இருக்கும்போது இந்திய அணி இது போன்ற தோல்விகளை தான் சந்திக்கும் எனவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு குறித்து மனோஜ் திவாரி கடும் விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார். சமீபத்தில் இந்திய அணி கம்பீரின் தலைமை பயிற்சியாளராக வந்ததில் இருந்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நீண்ட காலத்திற்குப் பின் தோல்வி, சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக ஒயிட் வாஷ் தோல்வி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் தோல்வி என இந்திய அணி முக்கிய தொடர்களில் எல்லாம் தோல்விகளை சந்தித்து இருக்கிறது/
கம்பீர் வரும் முன் இந்திய அணி இத்தனை மோசமாக செயல்படவில்லை என்பதால் இந்த தோல்விகளுக்கு கம்பீர் தான் காரணம் என பல்வேறு வகைகளிலும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இது பற்றி பேசி இருக்கிறார்.
"விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் சாய்ராஜ் பஹுதுலே ஆகியோர்தான் அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்கள் தான் பல ஆண்டுகளாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார்கள். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது தானாகவே முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம் தான்."
"ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனிடையே கவுதம் கம்பீர் எப்படி பயிற்சியாளராக வந்தார் என்பது யாருக்கு தெரியவில்லை. எனவே, இது போன்ற மோசமான முடிவுகள் தான் நமக்கு கிடைக்கும். அனுபவம் இல்லாத ஒருவரை பயிற்சியாளராக நியமித்தால் இதுதான் நடக்கும். அவர் மிகவும் ஆக்ரோஷமான நபர் என்பது நமக்குத் தெரியும். அப்படி இருந்தால் இது போன்ற தோல்விகள் தான் நமக்கு கிடைக்கும்."
"ஐபிஎல் முடிவுகளை வைத்து பயிற்சியாளரை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு. என்னை பொருத்தவரை அது சரியான தேர்வு கிடையாது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு கவுதம் கம்பீர் மட்டுமே காரணம் அல்ல. சந்திரகாந்த் பண்டிட் மற்றும் சிலரும் அதற்குக் காரணம்." என்றார் மனோஜ் திவாரி.