மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நடந்த சில சம்பவங்கள், இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை கடும் கோபம்கொள்ள வைத்திருக்கிறது. இது குறித்து அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டமாகப் பேசினார். என்ன நடந்தது?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி போட்டியை டிரா செய்யும் நிலைக்கு நகர்த்திக்கொண்டு சென்றது. அப்போது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்து வந்தனர். ரவீந்திர ஜடேஜா 90 ரன்கள் எடுத்தும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்கள் எடுத்தும் இருந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை டிரா செய்து கொள்ளலாம் என அழைத்தார்.

அப்போது 14 ஓவர்கள் மீதமிருந்தன. அந்தச் சூழ்நிலையில் எந்த ஒரு அணியாலும் வெற்றி பெற முடியாது என்பதால், ஸ்டோக்ஸ் அந்த முடிவை எடுத்தார். அதே சமயம், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போட்டியை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், அதை சதமாக மாற்ற நினைத்தனர். அதனால், பென் ஸ்டோக்ஸ் விடுத்த அழைப்பிற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, போட்டி முடிந்தவுடன் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுக்குக் கை குலுக்க மறுத்தார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், போட்டிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இது குறித்துப் பேசுகையில், "ஒருவர் 90 ரன்கள் எடுத்திருக்கும்போதும், மற்றொருவர் 85 ரன்கள் எடுத்திருக்கும்போதும் போட்டியை முடிக்கலாமா? அவர்கள் சதம் அடிக்கத் தகுதி இல்லாதவர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "இங்கிலாந்து வீரர்களும் 90 ரன்கள் மற்றும் 85 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கும்போது போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா? ஒருவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பில் இருக்கும்போது அதை நாம் அனுமதிக்க வேண்டாமா? இங்கிலாந்து அணி இப்படித்தான் விளையாடும் என்றால் அது அவர்கள் விருப்பம். ஆனால், இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்" என்று கௌதம் கம்பீர் வாதிட்டார்.
இதில், ரவீந்திர ஜடேஜா தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை அடித்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் கௌதம் கம்பீர் சுட்டிக்காட்டிப் பேசினார். பென் ஸ்டோக்ஸ் செயலுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.