மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ 10 புதிய விதிகளை அறிவித்து இருக்கிறது. இந்திய அணி சமீபத்தில் பல படுதோல்விகளை சந்தித்த நிலையில் பிசிசிஐ வீரர்களின் சுதந்திரத்தில் கை வைத்துள்ளது. குறிப்பாக மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
பிசிசிஐ இத்தனை கடுமையான விதிகளை அறிவிக்க யார் காரணம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் இதற்கு இந்த விதிகளை அமல்படுத்த முக்கிய காரணம் என கூறப்பட்டு வருகிறது. அது உண்மையா? என பிசிசிஐ வட்டாரத்தில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின் இந்திய அணி தொடர்ந்து பல முக்கிய தொடர்களை இழந்து இருக்கிறது. வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது தான் இதில் மோசமானது.
நியாயமாக பார்த்தால் பயிற்சியாளர் மாற்றத்திற்கு பின்பு தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என்பதை பிசிசிஐ கவனத்தில் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். கம்பீர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவரது செயல்பாட்டை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நடந்திருப்பது அதற்கு நேர்மாறான விஷயம்.
கம்பீரை விட்டு விட்டு இந்திய அணியின் மூத்த வீரர்களை குறி வைத்து பிசிசிஐ பல்வேறு கடுமையான விதிகளை அமல்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின்பு பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய வீரர்கள் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா சில விஷயங்களை கூறி இருக்கிறார்.
அதில் பயிற்சியாளர்கள் குழுவை பற்றி அவர் சில விஷயங்களை கூறி இருந்தார். அதே போல பிசிசிஐ தனிப்பட்ட முறையில் இந்திய வீரர்களுடன் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. அப்போது சில வீரர்கள் பயிற்சியாளர்கள் குழுவின் செயல்பாடு பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. தன் மீது இந்திய அணி வீரர்கள் குறி வைப்பதை உணர்ந்து கொண்ட பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணி வீரர்களின் மீது சில புகார்களை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மற்ற நாட்டு கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கிடைக்காத சில வசதிகள் இந்திய அணி வீரர்களுக்கு உள்ளன. அவற்றை சுட்டிக்காட்டி அவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும் என கம்பீர் பிசிசிஐ-க்கு யோசனை கூறி இருக்கிறார். அதை பிசிசிஐ-யும் அமல்படுத்தி இருக்கிறது. அதன் பயனாகத்தான் இனி இந்திய அணியின் அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஒரு விதி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதேபோல வீரர்கள் தனிப்பட்ட உதவியாளர்களை வைத்துக் கொள்ளக் கூடாது, குடும்பத்தினரை தொடர் முழுவதும் உடன் வைத்திருக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை குறி வைத்து அமல்படுத்தப்பட்ட விதிகள் என்றே கூறப்படுகிறது. கவுதம் கம்பீர் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்.
ஆனால். இது முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்திய அணி வீரர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி இருக்கும் பிசிசிஐ, அடுத்து வரும் தொடர்களில் வெற்றிகள் கிடைக்கவில்லை என்றால் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அவரது உதவி பயிற்சியாளர்கள் மீது இதைவிட கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை என்பதால் மட்டுமே தற்போது பிசிசிஐ அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அவர் கேட்ட அனைத்தையும் பிசிசிஐ செய்து வரும் நிலையில், இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பவில்லை என்றால் அவரது பதவி பறிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.