புனே: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சிவம் துபே அரை சதம் அடித்த போது வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு கை தட்டியதாகவும், அதே சமயம் அவருக்கு பிடித்தமான வேகப் பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா முதல் விக்கெட்டை வீழ்த்திய போது வெறிகொண்டு அதை கொண்டாடியதாகவும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவர் என்பதால் தான் சிவம் துபே அரை சதம் அடித்த போது அவர் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 57 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் சிவம் துபே ஆடுகளத்திற்கு வந்தார். அவர் துவக்கம் முதலே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்து வந்தார். மறுபுறம் ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடி, பின்னர் கடைசி சில ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடினார்.
ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த நிலையில், சிவம் துபே கடைசி ஓவர் வரை நின்று 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து இருந்தார். விக்கெட் வீழ்ச்சியையும் தடுத்து இந்திய அணிக்கு கவுரவமான ஸ்கோரையும் பெற்று தந்ததில் சிவம் துபேவுக்கு அதிக பங்கு இருந்தது. ஆனால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சிவம் துபே அரை சதம் அடித்தபோது மற்ற துணை பயிற்சியாளர்களுடன் எழுந்து நின்று கைதட்டிய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அப்போது கம்பீர் தனது முகத்தை கோபமாக வைத்துக் கொண்டிருப்பது போல இருந்தது. வேண்டா வெறுப்பாக எழுந்து கைதட்டுவது போல இருந்தது. அதே சமயம் இந்த போட்டியில் சிவம் துபேவுக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதால் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட ஹர்ஷித் ராணா தான் வீசிய முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்திய போது அதை ஆக்ரோஷத்தோடு கொண்டாடினார் கவுதம் கம்பீர்.
இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு கம்பீருக்கு சிஎஸ்கே வீரர்களை பிடிக்காது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை தான் பிடிக்கும் என ஒரு தரப்பு ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு உள்ளனர். மேலும், கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததில் இருந்து இந்திய அணியில் சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொருவராக புறக்கணிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டி, சிவம் துபே அரை சதம் அடித்து விட்டதால் இந்தப் போட்டியுடன் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது என்பதால் கம்பீர் இவ்வாறு நடந்து கொண்டார் என சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
கவுதம் கம்பீர் ஏன் அவ்வாறு கைதட்டினார்? என்பது நமக்கு தெரியாது. அவர் வேறு சிந்தனைகளில் இருந்தபோது அவ்வாறு முகத்தை வைத்துக் கொண்டு கை தட்டி இருக்கலாம். ஆனால், ரசிகர்களுக்கு இவ்வாறு சந்தேகம் வருவது போன்ற சம்பவங்கள் கடந்து ஆறு மாதங்களாக இந்திய அணியில் நடந்து வருகிறது. அதை தான் இந்த விமர்சனம் நமக்கு உணர்த்துகிறது.