மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் பிசிசிஐ விதிமுறையால் சிக்கல் எழுந்துள்ளது. கவுதம் கம்பீர் தனது உதவியாளரை இதுவரை நடந்த கிரிக்கெட் தொடர்களுக்கு தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்திய அணி தங்கும் அதே ஹோட்டலில் அவரது உதவியாளரும் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
மேலும், கவுதம் கம்பீர் எங்கெல்லாம் செல்கிறாரோ அவருடன் அந்த உதவியாளரும் பயணம் செய்து வந்தார். குறிப்பாக தேர்வு குழுவினர் அல்லது இந்திய அணியினருடன் கவுதம் கம்பீர் இருக்கும்போதும் அவரது அருகில் அந்த உதவியாளரும் இருந்துள்ளார். இது இந்திய அணி வட்டாரத்தில் பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கிய விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பின் பிசிசிஐ 10 விதிமுறைகளை வகுத்திருந்தது. அதில் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்களை இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டல்களுக்கோ பயிற்சி செய்யும் இடத்துக்கோ அழைத்து வரக்கூடாது என்ற விதிமுறையும் இடம் பெற்று இருந்தது. அந்த விதிமுறை வீரர்களுக்கு மட்டும் தானா? என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால் தற்போது அது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் பொருந்தும் என்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் போது கவுதம் கம்பீரின் உதவியாளர் இந்திய அணி தங்கி இருந்த ஹோட்டலில் தங்க வைக்கப்படவில்லை.
மாறாக கவுதம் கம்பீரின் சொந்த செலவில் அந்த உதவியாளர் வேறு ஒரு ஹோட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த உதவியாளர் இந்திய அணி விளையாடிய மைதானங்களுக்கு வந்தாலும் இந்திய அணி வீரர்கள் இருந்த இடத்தின் அருகே செல்லவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதே போல, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தனது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல கோலி அனுமதி கோரி இருந்ததாகவும், அதை பிசிசிஐ மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விதிமுறை இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மத்தியில் ஒரு ஒழுக்கத்தை மேம்படுத்தவும், தேவையற்ற கவனச்சிதறல்களை தவிர்க்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.