லண்டன்: இந்தியாவுக்கு எதிரான தொடரின் விளையாடுவதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு ஆஷஸ் தொடருக்கு பயிற்சியாக இருக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான், தெரிவித்துள்ளார். வரும் வெள்ளியன்று, இங்கிலாந்து அணி, லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்வான்,இந்த முறை இங்கிலாந்து தங்கள் சொந்த மண்ணில் இந்தியாவை பெருமளவில் வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார். "இது ஆஷஸுக்கு ஒரு சரியான தயாரிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான தொடர் மிகப்பெரியது.

கடந்த இரண்டு அல்லது மூன்று முறை, நாங்கள் இந்தியாவுக்கு சென்றபோது முற்றிலும் தோற்கடிக்கப்பட்டோம். எனவே, நம் சொந்த மைதானத்தில், நம் மண்ணில் இந்தியாவை வீழ்த்த வேண்டும். நாம் நன்றாக விளையாட வேண்டும்," என்று ஸ்வான் கூறினார்.
இந்தியாவுக்கு எதிரான தொடர், இங்கிலாந்தின் அனுபவம் குறைந்த பந்துவீச்சு அணிக்கு தங்கள் ரிதத்தை கண்டறிய வாய்ப்பை வழங்கும் என்று ஸ்வான் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அணியில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா இருக்க மாட்டார்கள். இவர்கள் பேட்டிங்கில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள்.
அவர்கள் இல்லை என்றாலும், அவர்களுக்கு பதிலாக சிறந்த வீரர்கள் வருகிறார்கள், ஆனால் நம் களசூழலை நன்கு பயன்படுத்தி பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் நம்மிடம் உள்ளனர். இங்கிலாந்து இந்தத் தொடரை வெல்லும் என்று நினைக்கிறேன், நான் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெல்லும் என்று நினைக்கிறேன்.
ஆனால் 3-2 என்ற முடிவு அடைந்தால் கூட எனக்கு பரவாயில்லை. ஆஷஸுக்கு செல்லும் முன் நம்பிக்கையைப் பெற நாம் நன்றாக செயல்பட வேண்டும் " என்று ஸ்வான் தெரிவித்தார். இங்கிலாந்து கடைசியாக 2015 இல் 3-2 தொடர் வெற்றியுடன் ஆஷஸை வென்றது, மேலும் 2011 முதல் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றி பெறவில்லை.