மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி இருக்கின்றது. இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் இரண்டுக்கு என்று கணக்கில் சமனில் இருக்கும்.
இல்லை என்றால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கின்றது. 23ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்," நான் லார்ட்ஸ் டெஸ்டுக்கு முன்பாகவும் இதை தான் சொன்னேன். பிர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு முன்பும் இதை தான் கூறுகின்றேன். இந்திய அணியில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இங்கிலாந்து வீரர்கள் எந்த நெருக்கடியும் இன்றி அதிரடியாக விளையாடுகிறார்கள்."
"அப்படி இருக்கும்போது குல்தீப் யாதவ் அணியில் இருந்தால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். குல்தீப் யாதவ் ஒரு மிஸ்டரி ஸ்பின்னராக இருப்பார். அவர் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை எடுப்பார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பந்து வந்தால் அதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்."
"பழைய பந்தில் எதுவுமே செய்ய முடியவில்லை என்றால் குல்தீப் யாதவிடம் பந்தை கொடுங்கள். அவர் விக்கெட் எடுப்பார். நான் அணியின் கேப்டனாக இருந்திருந்தால் நிதிஷ் குமாரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்த்திருப்பேன்" என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணி 193 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, ஜடேஜா தனியாளாக நின்று போராடினார். அப்போது வாஷிங்டன் சுந்தர் நிதிஷ்குமார் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.