இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 182 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.
இதனால் நான்காவது டி20 போட்டிகள் வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி களம் இறங்கி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் இன்று ரிங்கு சிங் ,சிவம் துபே, ஆர்ஸ்தீப் வந்தார்கள். இதை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன்,ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதேபோன்று திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் டக் அவுட்டாகி இந்திய அணி ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.
இந்த சூழலில் நான்கு பவுண்டர்களை விரட்டி அபாரமாக விளையாடி வந்த அபிஷேக் ஷர்மாவும் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி சரிவை நோக்கி சென்ற போது ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே ஆகியோர் ஜோடி சேர்ந்து கவுண்டர் அட்டாக் இன்னிங்சை விளையாடினார்கள். இதில் கடும் நெருக்கடிக்கு இடையே விளையாடிய ரிங்கு சிங்,நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இன்னிங்சை கட்டமைத்தார்.
அதன் பிறகு தான் ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி தடுமாறிய நிலையில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவருக்கு சிவம் துபேவும் நன்றாக கம்பெனி கொடுத்து ரன்களை சேர்த்தார். குறிப்பாக ஆதில் ரசித்துக்கு எதிராக சிவம் துபே பட்டையைக் கிளப்ப இந்திய அணி சரிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டது.
ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும். ஹர்திக் பாண்டியா ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்தாலும் சிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஷக்கிப் மஹமுத் மூன்று விக்கெட்டுகளையும் , ஓவர்டன் இரண்டு விக்கெட்டுகளும், ஆதில் ரசித் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்கள்.