கயானா: டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் வீரர் ஹர்திக் பாண்டியா தான் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் 10 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தாலோ அல்லது 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள் எடுத்தாலோ ஒட்டுமொத்தமாக ஆட்டமே மாறிவிடும். ஹர்திக் பாண்டியா அப்படியான வீரர் தான் என்று கம்பீர் பாராட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. நாளை இரவு 8 மணிக்கு நடக்கவுள்ள போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. கயானா மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கயானா மைதானத்தில் நடந்த பகல் நேர போட்டிகள் எதுவும் ஹை-ஸ்கோரிங் ஆட்டமாக இருந்ததில்லை. இதனால் 145 ரன்கள் முதல் 160 ரன்கள் எடுத்தாலே, வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிறது. இதற்கேற்றபடி இந்திய அணி திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும், இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர், ஜோர்டன் மற்றும் ரஷித் ஆகியோரை தொடக்கத்திலேயே அழுத்தத்திற்கு தள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முக்கியமான வீரராக மாறியுள்ளார் ஹர்திக் பாண்டியா. ஏனென்றால் ஃபினிஷர் மற்றும் 3வது வேகப்பந்துவீச்சாளர் என்ற ரோலை ஹர்திக் பாண்டியா மிகச்சிறப்பாக செய்து வருகிறார். இதுகுறித்து இந்திய ஜாம்பவான் கவுதம் கம்பீர் பேசுகையில், ஹர்திக் பாண்டியாவிடம் திறமை, மன உறுதி இருப்பதால் தான் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக இருக்கிறார்.
ஒரு பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக ஒரு எக்ஸ் ஃபேக்டர் வீரராக ஹர்திக் பாண்டியா திகழ்ந்து வருகிறார். டி20 கிரிக்கெட்டில் 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தால் மொத்தமாக ஆட்டமே மாறிவிடும். அதேபோல் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தாலும் தலைகீழாக ஆட்டம் மாறும். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடினாலே நிச்சயம் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதில் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் சொல்லவே வேண்டியதில்லை.
ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு குறைந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவ்வளவு திறமையான வீரர் ஹர்திக் பாண்டியா. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஏதோவொரு காலம் கடினமாக இருக்கும். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவதற்கு யாராலும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.