கயானா : டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை எதிர்க்க தயாராகும் வகையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அந்த பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா பந்தை பார்க்காமல் சரியாக கணித்து விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை விளையாடவுள்ளன. ஏற்கனவே இதற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையி, இந்தியா அணி கயானா மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் அபாரமான பேட்டிங் ஃபார்மில் உள்ளனர். தற்போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் சரியான நேரத்தில் உச்சக்கட்ட ஃபார்முக்கு வந்திருக்கிறார்.
இந்திய அணியின் 3வது வேகப்பந்துவீச்சாளராக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, ஃபினிஷர் ரோலையும் மிகச்சிறப்பாக செய்து வருகிறார். வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்துகளில் 27 ரன்களை விளாசி இந்திய அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.
அதேபோல் பவுலிங்கில் 5 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கிட்டத்தட்ட 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் எப்படியொரு ஃபார்மில் இருந்தாரோ, அப்படியான ஃபார்மில் தற்போது ஹர்திக் பாண்டியா உள்ளார். இந்த நிலையில் அரையிறுதி போட்டியை முன்னிட்டு ஹர்திக் பாண்டியா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ளார். அதில், பந்தையே பார்க்காமல் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற ஷாட்களை விளையாடும் போது பேட்ஸ்மேன்களின் மன உறுதி உச்சத்தில் இருப்பதாக பார்க்கப்படும். இதனால் ஹர்திக் பாண்டியா மனதளவிலும் வலிமையாக இருப்பதாக ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 14 லீக் போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளிலும் மும்பை ரசிகர்களின் எதிர்ப்பை ஹர்திக் பாண்டியா நேரடியாக எதிர்கொண்டார். அதேபோல் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து கோரியிருப்பதாக கூறப்பட்டு வரும் சூழலில், சொந்த வாழ்க்கையிலும் ஹர்திக் பாண்டியா பின்னடைவை சந்தித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.