மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். ஹர்திக் பாண்டியா எப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
கடந்த டி20 உலக கோப்பை தொடரில் கூட ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் தனது பந்து வீச்சால் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து ஐசிசி இணையதளத்திற்கு ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்.

"இந்திய அணிக்காக விளையாடும்போது நெருக்கடியை சமாளிக்க தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஹர்திக் பாண்டியாவுக்காக விளையாடவில்லை. நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன். இதை தான் நான் குறிக்கோளாக வைத்திருக்கின்றேன்".
"கடைசி இரண்டு பந்துகளை விளையாடுகிறோமோ, இல்லை 60 பந்துகளை எதிர்கொள்கிறோமோ என்பது முக்கியமல்ல. நாம் ஒவ்வொரு பந்தை எதிர்கொண்டு அணியின் வெற்றிக்காக உதவ வேண்டும் என்பதுதான் முக்கியம். கடும் நெருக்கடியான சூழலில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ
அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்".
"இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். இந்த போட்டியை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். இதனால் பல உணர்ச்சிகளுடன் தான் இந்த போட்டியில் நாங்கள் விளையாடுவோம். இந்த போட்டிக்கு நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்".
"என்னுடைய திட்டம் எல்லாம் வெறும் சிம்பிள் தான். என்னுடைய பலத்தை வைத்து விளையாட வேண்டும். அறிவுபூர்வமாக கிரிக்கெட் விளையாட வேண்டும். எனக்கு பும்ரா போல் எல்லாம் திறமை கிடையாது. ஆனால் எனக்கு ஹர்திக் பாண்டியாவுக்கு உரிய திறன் இருக்கின்றது.
இதனால் எனக்கு என்ன வருமோ அதை சரியாக நான் பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பேன். என் பந்துவீச்சுக்கு எதிராக நீங்கள் அடிக்க வேண்டும் என்றால் நான் வீசும் நல்ல பந்துகளை தான் நீங்கள் அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தான் நான் பந்து வீசுவேன். எப்போதும் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பந்து வீசுவேன்" என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.