மும்பை: இந்திய அணியின் வருங்கால கேப்டன் என கனவில் மிதந்து வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய அடியை கொடுத்து இருக்கிறார் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர். ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருந்தபோது ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதனால் அவர் தான் இனி டி20 அணியின் நிரந்தர கேப்டன் என பலரும் கூறி வந்தனர்.
2024 டி20 உலகக் கோப்பையிலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் தான் இந்திய அணி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திடீரென ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையில் விளையாட முடிவு எடுத்தார். ரோஹித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையையும் வென்றது. உலகக் கோப்பை அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருந்தார்.

டி20 உலகக் கோப்பையின் முடிவில் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அடுத்து தனக்கு தான் கேப்டன் பதவி கிடைக்கும் என ஹர்திக் பாண்டியா ஆவலாக காத்திருந்தார். ஆனால், சூர்ய குமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. தனக்கு துணை கேப்டன் பதவியாவது கிடைக்கும் என ஹர்திக் பாண்டியா நினைத்தார்.
ஆனால், கடந்த ஆண்டு நடந்த வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இப்போதாவது தனக்கு துணை கேப்டன் பதவி கிடைக்கும் என ஹர்திக் பாண்டியா நினைத்தார். ஆனால், இப்போது அல்ல, இனி எப்போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி கூட கிடைக்காது என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர். இந்த முறை டி20 அணியின் துணை கேப்டனாக ஆல் - ரவுண்டர் அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இது நியாயமான தேர்வு தான் என ரசிகர்களும் கூறி வருகின்றனர். ஹர்திக் பாண்டியா இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்து இருக்கக்கூடும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்ததால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி விளையாடும் என சிலர் ஊகங்களை வெளிவிட்டு வந்தனர்.
டி20 அணியின் துணை கேப்டன் பதவி கூட அளிக்கப்படாத ஒருவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.