லீட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரகானே, அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்டு இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் 350 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த சூழலில் இந்த தொடரில் இந்திய அணிக்கு ஹாரி புரூக் மிகவும் அபாயகரமான வீரராக இருக்கப் போகிறார் என புஜாரா தெரிவித்திருக்கிறார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தடுமாறிய போது ஹாரி புரூக் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 11 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த நிலையில் ஹாரி புரூக் குறித்து பாராட்டி பேசிய புஜாரா, "நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹாரி புரூக் அறிமுகமானார். முதல் போட்டியில் இருந்து முதிர்ச்சியை காட்டி வருகிறார். தற்போது ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியிலும் ஸ்டார் வீரராக உருவெடுத்திருக்கின்றார். இதன் காரணமாக பொறுப்புகளை உணர்ந்து அவர் விளையாடுகிறார்."
"அவர் ஆடிய ஷாட்டுகளை பார்த்தாலே பல வீரர்களால் அது செய்ய முடியாது என்று நமக்கு புரிய வரும். அவர் விளையாடுவதை பார்க்கும் போது ரிஷப் பண்டை பார்ப்பது போல் இருக்கின்றது. ஏனென்றால் இரண்டு வீரர்களுமே பயமின்றி விளையாடுகிறார்கள். இரண்டு வீரர்களுமே பவுலர்களின் பந்துவீச்சை சிதறடிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்."
"இதன் மூலம் பவுலர்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் தான் ஹாரி புரூக் இங்கிலாந்து அணி வெற்றிக்கு மிகவும் முக்கியமான வீரராக இருப்பார். எப்போதெல்லாம் அணி தடுமாறுகிறதோ அப்போது ஹாரி புரூக், அணியை காப்பாற்றுவார் என நினைக்கின்றேன். அது மட்டுமில்லாமல் தொடர்ந்து அதிரடியாக ஆடுவதால், அது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்" என்று புஜாரா கூறியுள்ளார். ஹாரி புருக ஏற்கனவே இங்கிலாந்து ஒருநாள், டி20 அணியின் கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.