மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் இன்று மோதவுள்ளன. மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக், இந்தப் போட்டியில் இந்தியாவே வெற்றிபெற வாய்ப்புள்ள பிடித்தமான அணி என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அதே சமயம், தங்கள் அணியை 'குறைத்து மதிப்பிடப்பட்ட' அணியாக பலரும் கருதுவதாக கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இந்திய அணிக்குச் சொந்த மண்ணில் சாதகமான சூழல், உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு மற்றும் ஆடுகளங்கள் குறித்த ஆழமான புரிதல் இருப்பதால் அவர்களே வெற்றிபெற வாய்ப்புள்ளவர்கள்' என்று ப்ரூக் கூறினார். இங்கிலாந்து அணி தங்களது உண்மையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், 'எதுவும் நடக்கலாம்' என்று அவர் எச்சரிக்கை செய்தார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் இரண்டு சுற்றுகளில் இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளும் தலா ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்தன. லீக் போட்டியில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியைச் சந்திக்க, இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் ஒரு படுதோல்வியைப் பதிவு செய்தது. எனினும், சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தங்களது அபார ஆட்டத்தை பவெளிப்படுத்தி அனைத்து மூன்று போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றது.

இது குறித்து பேசிய ஹாரி ப்ரூக் "கிரிக்கெட்டின் மிகவும் பிரபலமான மைதானங்களில் ஒன்றில், சொந்த மண்ணில், உலகக் கோப்பை அரையிறுதியில் சொந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடுவது எங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கனவு நனவான தருணம். நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம், முழுமையான ஒரு சிறந்த ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அது நிச்சயம் விரைவில் வரும் என்று நான் உணர்கிறேன்"
"நாளைய இரவுதான் அந்த நேரம் என்று நம்புகிறேன். அங்கு களமிறங்கி சுதந்திரமாக, துணிச்சலாக விளையாடி, எங்களால் முடிந்த அளவு எதிரணிக்குச் சவால் விடுவோம் என்று எதிர்பார்க்கிறோம்" என்று ப்ரூக் உறுதியளித்தார். T20 கிரிக்கெட் ஒரு கணிக்க முடியாத விளையாட்டு என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
"போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவே வெற்றிபெற வாய்ப்புள்ள அணி என்று நான் நம்புகிறேன். உள்நாட்டு மக்கள் ஆதரவு, ஆடுகளங்களைப் பற்றிய சிறப்பான புரிதல் ஆகியவை அவர்களுக்குப் பலம் சேர்க்கின்றன. ஆனால், "T20 போட்டி மிகவும் கணிக்க முடியாத, நிலையற்ற ஒரு விளையாட்டு; இதில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்" என்றும் எச்சரித்தார்.
"நாங்கள் வெற்றி பெற்றிருக்கவே கூடாத சில போட்டிகளிலும் வென்றிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், இதுவரை நடைபெற்ற எந்தப் போட்டிகளிலும் நாங்கள் முழுமையாகத் தோல்வியடைந்து வெளியேறியதாக உணர்ந்ததில்லை. உலகப் போட்டிகளில் இத்தகைய உறுதி மற்றும் விடாமுயற்சி மிகவும் சாதகமாக அமையும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் T20I தொடரில் இங்கிலாந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய அனுபவத்திலிருந்து இந்திய அணி பெரும் நம்பிக்கையைப் பெறும். ஆனால், ஹாரி ப்ரூக் தலைமையிலான இந்த இங்கிலாந்து அணி, கடந்த ஆண்டை விடப் பல மடங்கு பலமாகி இருக்கிறது. ஜோஸ் பட்லர், ஃபில் சால்ட் போன்ற நட்சத்திர வீரர்களின் பேட்டிங் தடுமாறினாலும், அணியின் வலுவான மற்றும் அனைத்துத் தரப்பு பந்துவீச்சுப் படை, அவர்களுக்குப் பல முக்கியமான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளது.