மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது.
எனினும் இங்கிலாந்து அணியினர் வழக்கம் போல் இந்திய வீரர்களை வம்பிழுக்கும் வகையில் டெஸ்ட் போட்டிகள் தொடக்கத்திற்கு முன்பு பேசி இருப்பது இந்திய ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் அதிரடி வீரராக அறியப்படும் ஹாரி புரூக், செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியா எங்களை பார்த்து பயப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "இனி நாங்கள் நல்ல பசங்கள் போல் களத்தில் நடந்து கொள்ள மாட்டோம். கிரிக்கெட்டின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என்று நாங்களும் முயற்சி செய்தோம். ஆனால் எங்கள் அணி வீரர்களை இந்திய வீரர்கள் குறிவைத்து தாக்கினார்கள். அதை நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து பார்த்தோம்."
"இதை அடுத்து அடுத்த நாள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு எடுத்தோம். கடைசி இன்னிங்ஸில் இந்தியாவை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களுடைய நடவடிக்கை காரணமாக இந்திய அணி கடும் அழுத்தத்தை சந்தித்தது. அது குறைவான ஸ்கோர் ஆக இருந்தாலும், ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது."
"இதனால் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்தத் தொடரில் நாங்கள் விளையாடும் அனைத்து ஆட்டமும் கடைசி நாள், கடைசி மணி நேரம் வரை செல்கின்றது. பலரும் எங்களிடம் இந்த தொடர் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று வாழ்த்துகிறார்கள்."
"என்னிடம் பேசிய பலரும், நாங்கள் பார்த்ததிலே லார்ட்ஸ் போட்டி சிறந்த ஒன்று என்று கூறுகிறார்கள். எனவே எஞ்சிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் மிகுந்த எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம். எப்போதுமே கிரிக்கெட்டில் களத்தில் 11 வீரர்களுக்கும் இரண்டு வீரர்களுக்கும் இடையே தான் மோதல். இப்படி தான் கிரிக்கெட் வளர்க்கப்பட்டிருக்கின்றது."
"இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா எங்களுக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தார்கள். இதற்கு காரணம் எங்களைப் பார்த்து அவர்கள் பயந்தது தான் எங்களால் மிகப் பெரிய இலக்கை எட்ட முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். இது எங்களுக்கு சாதகமாக அமைகிறது. இதன் மூலம் எங்களுடைய நம்பிக்கை அதிகரித்து இருக்கின்றது" என்று ஹாரி புரூக் கூறியுள்ளார்.