புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இதனால் ஐந்தாவது டி20 போட்டி சமீபிரதாய ஆட்டமாக தான் நடைபெறும்.
புனேவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் 12 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இருந்து இந்தியா தடுமாறியது. இந்த சூழலில் ரிங்கு சிங் அபாரமாக விளையாடி 26 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அதன் பிறகு சிவம் துபே,ஹர்திக் பாண்டியா ஜோடி இணைந்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. அபாரமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும். சிவம் துபே தன் பங்கிற்கு 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 23 ரன்களும், பென் டக்கட் 19 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
62 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்ததால் சரிவை கண்டது. எனினும் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி புக் தனியாளாக நின்று அதிரடியை காட்டினார். இதன் மூலம் 26 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி நோக்கி சென்றது.
அப்போது வருண் சக்கரவர்த்தி தன்னுடைய அபாரமான மேஜிக்கை நிகழ்த்தினார். ஒரே ஓவரில் ஹாரி புருக் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து அணி மீண்டும் தடுமாறியது. இதேபோன்று ஜோப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை ரவி பிஸ்னாய் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 146 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது ஜிம்மி ஓவர்டன் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி அடிக்க மீண்டும் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது.
எனினும் ஹர்ஷித் ராணா மற்றும் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் தங்களது இறுதி ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசி இங்கிலாந்து அணியை 166 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியாவில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. பந்துவீச்சு தரப்பில் ரவி பிஷ்னாய் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 17வது டி20 தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது.