புனே: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாதி போட்டியில் செய்த அணி மாற்றம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அம்பயர்களிடம் முறையிட்டார். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் தோல்வியும் அடைந்தது. அதனால், இந்த அணி மாற்ற விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது.
இந்தப் போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சிவம் துபேவுக்கு கடைசி ஓவர் பேட்டிங் செய்த போது பந்து தலையில் தாக்கியதால் மூளை அழற்சி (Concussion) ஏற்பட்டது. இந்திய அணி ஃபீல்டிங் செய்த போது இரண்டு ஓவர்கள் வரை களத்தில் நின்ற அவர் பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதில் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் இந்த முடிவை எடுத்தார். அவர் ஹர்ஷித் ராணாவை அழைத்து பேசியதும் நேரலையில் ஒளிபரப்பானது.
இது போன்ற சூழ்நிலையில் ஒரு வீரர் மூளை அழற்சியால் நீக்கப்பட்டால் அவருக்கு இணையான வீரரை மட்டுமே அணியில் சேர்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், முழு நேர பேட்ஸ்மேனும், பகுதிநேர பந்து வீச்சாளருமான சிவம் துபேவுக்கு மாற்றாக, முழு நேர வேகப் பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
இதை எதிர்த்து அம்பயரிடம் முறையிட்டார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர். ஆனால், அம்பயர் அதை கண்டு கொள்ளவில்லை. இதை அடுத்து ஜோஸ் பட்லர் மற்றும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அதிருப்தியுடன் ஆடினர். இங்கிலாந்து அணியால் எதுவும் செய்ய முடியவில்லை. மாற்று வீரராக இறங்கிய ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. சிவம் துபே 53 ரன்கள் குவித்து இருந்தார். அடுத்து இங்கிலாந்து அணி சேஸிங் செய்த போது ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சரி சமமில்லாத மாற்று வீரராக உள்ளே வந்த ஹர்ஷித் ராணா இங்கிலாந்து அணியின் தோல்விக்கும் காரணமாக இருந்தது மேலும் புகைச்சலை அதிகரித்தது.