லீட்ஸ்: இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு முக்கிய வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி சுட்டிக்காட்டி இருக்கிறார். ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி, முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்காது என்று பிட்ச் வடிவமைப்பாளர் கூறியிருந்தார். இதற்கு ஏற்ப இங்கிலாந்து அணியும் டாஸ் வென்றவுடன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆனால், இந்திய அணி பேட்டிங் செய்தபோது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான சூழ்நிலையை வழங்கியது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்தனர். இருப்பினும், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி 471 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைச் சுட்டிக்காட்டிய சௌரவ் கங்குலி, "இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 600 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். ஹெடிங்லே மைதானம் இப்படி காய்ந்து போய் இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், 600 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தால், அதன் பிறகு ஆடுகளத்தின் தன்மை மாறியிருக்கும். இப்போது இந்திய அணி இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும். இது போன்ற ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது" எனத் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இந்திய அணி 471 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. அந்த அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்து இருந்தது. இங்கிலாந்து அணியின் ஓலி போப் சதம் அடித்து இருந்தார். இந்திய அணியைப் போலவே இங்கிலாந்து அணியும் அதிரடியாக ரன் சேர்த்து வருவதால், இந்தப் போட்டி தற்போது சமநிலையில் உள்ளது. எந்த அணி பக்கமும் போட்டி இருப்பதாகச் சொல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
ஒருவேளை இந்திய அணி 600 ரன்களை எடுத்திருந்தால், நிச்சயம் இந்தப் போட்டி இப்போது இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்திருக்கும். இனி மூன்றாவது நாளின் முடிவில்தான் எந்த அணி இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதைச் சொல்ல முடியும்.