லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தப் போட்டியில் இந்திய அணி போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இந்த சம்பவம் இங்கிலாந்து அணி மீது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்டத்தின் 35வது ஓவரின் கடைசிப் பந்துக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்தது. ஜடேஜா பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது, பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் அவர் வழியில் குறுக்கிட்டதால் இருவரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டு நிலைதடுமாறினர். பிரைடன் கார்ஸ் ஜடேஜாவை திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஜடேஜா, கார்ஸுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஏற்கனவே, கார்ஸ் தொடர்ந்து ரன் ஓடும் பேட்ஸ்மேன்களின் வழியில் குறுக்கிட்டு வந்ததால் ஜடேஜா கோபத்தில் இருந்தார். இந்த மோதலுக்குப் பிறகு கார்ஸ் வம்புக்கு இழுத்தை அடுத்து ஜடேஜா ஆக்ரோஷமாக கார்ஸை நோக்கி முன்னேறினார். நிலைமை மோசமாவதை உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சரியான நேரத்தில் தலையிட்டு இருவரையும் பிரித்து, சமாதானம் செய்தார். பிரைடன் கார்ஸ் தான் வேண்டுமென்றே மோதவில்லை என்று விளக்கமளித்தபோதும், கோபமாக பேசியதால் ஜடேஜா சமாதானம் அடையவில்லை.
ஏற்கனவே ஐந்தாம் நாள் காலை அமர்வில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர் என முக்கிய விக்கெட்டுகளை இழந்து, 82 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், இந்த மோதல் களத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
அதன் பின்னர் விக்கெட்கள் சரிந்தாலும் தனி ஆளாக போராடிய ஜடேஜா 181 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சில சீண்டல் சம்பவங்கள் காரணமாக இனி வரும் போட்டிகளில் இரு அணி வீரர்களும் மேலும் மோதல் போக்கில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.