லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி, இந்தியாவின் 6 ரன் த்ரில் வெற்றியுடன் முடிவடைந்த உடன் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லம் ஆகியோர் தொடர் நாயகன் விருதை வழங்கினார்கள். அதாவது இருவரும் தனித்தனியே இரண்டு தொடர் நாயகன் விருதை அளித்தார்கள்.
இந்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் ஆகிய இருவருக்கும் 'தொடர் நாயகன்' விருது வழங்கப்பட்டது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியது. பொதுவாக, ஒரு தொடரில் இரு அணிகளிலும் சேர்த்து சிறப்பாகச் செயல்படும் ஒரே ஒரு வீரருக்குத்தான் இந்த விருது வழங்கப்படும். ஆனால், இங்கு இருவருக்கு வழங்கப்பட்டது ஏன்? அதன் பின்னணியில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒரு சுவாரஸ்யமான பாரம்பரியம் உள்ளது.

பொதுவாக, ஒரு இருதரப்பு கிரிக்கெட் தொடரின் முடிவில், இரு அணிகளிலும் உள்ள வீரர்களில் சிறந்த வீரர் ஒருவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடர் நடைபெறும் போது, இரு அணிகளிலிருந்தும் தலா ஒரு சிறந்த வீரரைத் தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, பார்வையாளர் அணி மற்றும் சொந்த அணி ஆகிய இரண்டின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் ஒரு முறையாகும்.
இந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு அணியின் தலைமைப் பயிற்சியாளரும் எதிரணியில் இருந்து தொடரின் சிறந்த வீரரைத் தேர்ந்தெடுப்பார். அதன்படி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர், இங்கிலாந்து அணியின் சிறந்த வீரராக ஹாரி ப்ரூக்-கை தேர்ந்தெடுத்தார். அதே நேரத்தில், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், இந்திய அணியின் சிறந்த வீரராக கேப்டன் சுப்மன் கில்-லைத் தேர்ந்தெடுத்தார்.
இந்த நடைமுறை இப்போது புதிதாகப் பின்பற்றப்படுவதில்லை. இதற்கு முன்பும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. உதாரணமாக, 2018-ல் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, இந்திய அணியின் சிறந்த வீரராக அப்போதைய கேப்டன் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொடரில், இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக ஆல்ரவுண்டர் சாம் கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தொடர் முழுவதும் சுப்மன் கில் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய இருவரும் தங்களது அணிகளுக்காக மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்திய கேப்டன் சுப்மன் கில், இந்தத் தொடரில் 754 ரன்கள் குவித்து, ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். மறுபுறம், இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் 481 ரன்கள் குவித்தார். குறிப்பாக, இறுதி டெஸ்ட் போட்டியில் அவரது சதம், இங்கிலாந்தை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றது.
ஆக, தங்களது அணிகளுக்காக பேட்டிங்கில் தூணாக நின்று, ரன் மழை பொழிந்த இந்த இரு இளம் வீரர்களின் திறமையைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாகவே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாரம்பரியப்படி இந்த இரண்டு 'தொடர் நாயகன்' விருதுகளும் வழங்கப்பட்டன.