லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு சிறிய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ள நிலையில், இன்னும் 3.4 ஓவர்களில் புதிய பந்து எடுக்க முடியும். இதனால் கடைசி 3 விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தலாம் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 374 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை எடுத்திருந்தது. இதன்பின் 4வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் போப் - டக்கெட் கூட்டணி தொடங்கியது.

இதில் டக்கெட் 54 ரன்களிலும், போப் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் கூட்டணி இணைந்தது. 4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் 111 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேக்கப் பெத்தல் 5 ரன்களிலும், ஜோ ரூட் 105 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது.
ஜேமி ஸ்மித் - ஓவர்டன் கூட்டணி களத்தில் இருந்த போது, திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்டம் 5வது நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.
இந்தப் போட்டியை இந்திய அணி வெல்வதற்கு அற்புதமான சான்ஸ் கிடைத்துள்ளது. அதாவது இந்திய அணி இதுவரை 76.2 ஓவர்களை வீசி இருக்கிறது. இதனால் இன்னும் 3.4 ஓவர்களில் இந்திய அணிக்கு புதிய பந்து கிடைத்துவிடும். இதன் மூலமாக இங்கிலாந்து அணியின் டெய்லண்டர்களை வீழ்த்துவது எளியாக இருக்கும்.
சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் புதிய பந்தில் இன்னும் பயங்கரமான பவுலர்களாக இருக்கிறார்கள். இதனல் 35 ரன்கள் மட்டுமே இருந்தாலும், இந்திய அணி வெற்றிக்கு வாய்ப்புகள் கூடி இருக்கிறது. அதேபோல் இன்று மழை பெய்து வருவதால், பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.