எவ்வளவோ நாட்கள் கண்ணீர்விட்டு கதறியிருக்கிறேன்.. என் தந்தை கொடுத்த ஒரு அட்வைஸ்.. சர்ஃபராஸ் கான்!
விசாகப்பட்டினம் : ஒவ்வொரு முறையும் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கும் போதும் கண்ணீர்விட்டு கதறியுள்ளதாக இளம் வீரர் சர்ஃபராஸ் கான் தெரிவித்துள்ளார்.
ஜடேஜாவுக்கு பின் இந்திய யு19 உலகக்கோப்பை தொடரில் 2 முறை விளையாடிய வீரர் சர்ஃபராஸ் கான் தான். சிறுவயதிலேயே அபாரமான திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போதும் நட்சத்திர வீரர்களை நம்பியே வலம் வரும் ஆர்சிபி அணி, சர்ஃபராஸ் கானை ஒருமுறை தக்க வைத்தது. அதுவும் மெகா ஏலம் நடந்த போது சர்ஃபராஸ் கானை தக்க வைத்தது பலருக்கும் ஆச்சரியமளித்தது.

ஆனால் ஃபிட்னஸில் தீவிரம் காட்டும் விராட் கோலி, சர்ஃபராஸ் கானின் ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாக அவருக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. அதன்பின் சில ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடி வந்த சர்ஃபராஸ் கான், பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக உத்தரப் பிரதேச அணிக்காக ஆடினார். பின்னர் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய சர்ஃபராஸ் கான் சதம், இரட்டை சதம், முச்சதம் என்று ரன்களை விளாசி தள்ளினார்.
66 இன்னிங்ஸ்களில் விளையாடிய சர்ஃபராஸ் கான் 14 சதங்கள், 11 அரைசதங்கள் உட்பட 3,912 ரன்களை விளாசியுள்ளார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியை கதவு திறப்பதற்காக காத்திருந்த நிலையில், இந்திய ஏ அணியில் சர்ஃபராஸ் கான் ஆடிய ஆட்டம் அவருக்கான கதவை திறந்து வைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சர்ஃபராஸ் கான் பேசுகையில், ஒவ்வொரு முறை இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கும் போதும் கண்ணீர் சிந்தி இருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தந்தை ஒரு அட்வைஸ் மட்டுமே கொடுப்பார். தொடர்ந்து கடினமாக உழைக்கும் போது, ஒரு கட்டத்தில் உன்னை யாராலும் தடுக்க முடியாது. திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடுவதை போல், பொறுமையும் அவசியம் என்று கூறினார்.
அதேபோல் சிறுவயது முதலே தந்தை மற்றும் பயிற்சியாளர் இருவரும் ஒருவர் தான். அதனால் அவரின் உழைப்பும், நம்பிக்கையும் வீணாகி போகிட கூடாது என்பதே எனது லட்சியமாக இருந்தது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசையாகவும் இருந்ததால், கூடுதலாக உழைக்க தொடங்கினேன். அந்த உழைப்பிற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. தந்தைக்காகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications