ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க முடியவில்லை என்ற கவலை இல்லை என்று இந்திய இளம் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்து தடுமாறி வந்தது. அப்போது இணைந்த துருவ் ஜுரெல் - குல்தீப் யாதவ் கூட்டணி நிதானமான விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை 219 ரன்களாக உயர்த்தியது. இருப்பினும் 2வது நாள் முடிவில் இங்கிலாந்து அணியே வெற்றிபெறும் என்று பலரும் கணித்தனர்.

ஆனால் துருவ் ஜுரெல் ஒற்றை ஆளாக டெய்லெண்டர்களுடன் ஆடிய ஆட்டம், இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. கடைசி 3 விக்கெட்டுகளை வைத்து கொண்டு இந்திய அணியின் ஸ்கோரை 307 ரன்களாக உயர்த்தினார் துருவ் ஜுரெல். அவர் 90 ரன்களை எட்டிய போது, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாம் ஹார்ட்லி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பந்தை பவுலர்களின் கைகளில் இருந்தே தொடர்ந்து கண்காணித்து பேட்டிங் ஆடும் பழக்கத்தை கொண்டுள்ள துருவ் ஜுரெல், வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்களை எளிதாக கணித்து விளையாடுவது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான அதிரடியும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான நிதானத்தையும் ஒருங்கே பெற்றுள்ளார்.
இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் எந்த இடத்திலும் துருவ் ஜுரெல்லால் சிறப்பாக விளையாட முடியும். இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து துருவ் ஜுரெல் பேசுகையில், இதுதான் எனக்கு அறிமுக டெஸ்ட் தொடர். அதனால் நிச்சயம் அழுத்தம் இருக்கிறது. அந்த சூழலில் இந்திய அணிக்காக சிறந்த இன்னிங்ஸை விளையாட வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.
குல்தீப் யாதவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. நாங்கள் இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால் நாங்கள் எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம். ராஞ்சியில் சதம் அடிக்க முடியவில்லை என்ற கவலை இல்லை. டெஸ்ட் தொடரை வென்று கோப்பையை எனது கைகளால் ஏந்த வேண்டும் என்பதே கனவாக உள்ளது. ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய அணிக்காக விளையாடுவதே என் கனவு என்று கூறியுள்ளார்.