லக்னோ : இந்தியா - இங்கிலாந்து உலகக்கோப்பை லீக் போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்கள் குழு ஒன்று எல்லை மீறி விராட் கோலியை கிண்டல் செய்தது.
விராட் கோலி டக் அவுட் ஆன நிலையில் அவரை வாத்தாக சித்தரித்து மீம்ஸ் வெளியிட்டது அந்தக் குழு. அப்போதே கோலி ரசிகர்கள் பொங்கி எழுந்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
ஆனால், போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது அந்த அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். அதை அடுத்து இந்திய ரசிகர்கள் திருப்பி மோசமாக கிண்டல் செய்து, அந்த குழுவை உண்டு, இல்லை என செய்துவிட்டனர்.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆறாவது ஓவரின் போதே களத்துக்கு வந்தார் விராட் கோலி. பெரிய இன்னிங்க்ஸ் ஆடுவார் எதிர்பார்த்த நிலையில் அவர் ஒன்பது பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
இதை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் குழுவான "பார்மி ஆர்மி" (Barmy Army) விராட் கோலியை வாத்தாக சித்தரித்து மீம்ஸ் வெளியிட்டனர். அதில் நாங்கள் இன்று நடந்து சென்ற போது கண்ட காட்சி என பதிவிட்டு, அந்த மீம்ஸில் கோலி ஒரு வாத்தாக ஒரு குளத்தில் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.

இதைக் கண்ட கோலி ரசிகர்கள் பொங்கினர். உலகக்கோப்பை லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் போதே இந்த பேச்சா என அவர்களை திருப்பி கிண்டல் செய்தனர். அதில் ஒரு மீம்ஸில், "இங்கிலாந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் கீழே இருந்து பார்க்கும் போது" எனக் கூறப்பட்டு இருந்தது.
அதன் பின் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது அந்த அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். மற்றொரு நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 10 பந்துகளை சந்தித்து ஒரு பந்தை கூட சரியாக அடிக்க முடியாமல் டக் அவுட் ஆனார்.
இதை அடுத்து இந்திய ரசிகர்கள், "நாங்கள் இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். அப்போது இந்த காட்சியை கண்டோம்" என பதிவிட்டு பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட்டை இரண்டு வாத்துகளாக சித்தரித்து மீம்ஸ் வெளியிட்டு பதிலடி கொடுத்தனர்.
இந்தப் போட்டியில் இந்தியா 229 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து வெறும் 129 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இப்படி ஒரு மோசமான நிலையில் இங்கிலாந்து அணி இருக்கும் போதே மற்ற அணிகளை கிண்டல் செய்து வருகின்றனர் அந்த அணியின் ரசிகர்கள்.